உத்தரப்பிரதேசம் பரேலியில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, டேபிள் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒரு பெண்ணின் தலையில் பாட்டிலால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ஒரு சொகுசு விடுதி கிளப்பில், கிறிஸ்துமஸ் இரவு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறில் ஒரு பெண்ணின் தலையில் பாட்டிலை உடைத்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசுதோஷ் சிட்டியைச் சேர்ந்த மஹக் குப்தா என்பவர், கடந்த புதன்கிழமை இரவு தனது சகோதரருடன் 'மை பார் ஹெட் குவாட்டர்ஸ்' (My Bar Headquarters) என்ற ஹோட்டலுக்கு இரவு உணவிற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு கும்பலுக்கும் இவருக்கும் இடையே 'டேபிள்' (Table) பிடிப்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
கொடூரத் தாக்குதல்
போதையில் இருந்த அந்த நபர்கள், வாக்குவாதத்தின் போது மஹக் குப்தாவை ஆபாசமாகத் திட்டியதோடு, திடீரென ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் அங்கிருந்த கண்ணாடி பாட்டிலை எடுத்து மஹக் குப்தாவின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண், ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மஹக் குப்தா கூறுகையில், ஷைனித் ஸ்ரீவஸ்தவா, சலோனி படேல், துருவ் ராய் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக அவர் அடையாளம் காட்டியுள்ளார்.
தாக்குதல் நடந்தபோது ஹோட்டலில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் (Bouncers) அதைத் தடுக்கவோ, தாக்குதல் நடத்தியவர்களைப் பிடிக்கவோ எந்த முயற்சியும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
போலீஸ் நடவடிக்கை
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், காயமடைந்த பெண்ணை மீட்டு மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஹோட்டலில் உள்ள CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருவதாக போலீசார் கூறுகின்றனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.
ரத்தக் காயங்களுடன் இருக்கும் அந்தப் பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.


