திட்டமிட்டு மும்பையில் 26/11 பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் நீதிக்கு முன் நிறுத்த வேண்டும்: எஸ் .ஜெய்சங்கர்
மும்பையில் 26/11 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களை நினைவு நூறும் வகையில் இந்தியா இன்று 14வது ஆண்டு நினைவு நாளை கடைபிடித்து வருகிறது.
டெல்லியில் இன்று நடந்து வரும் நினைவு நாளில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் 166 பேர் கொல்லப்பட்ட மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த கொடிய தாக்குதலில் இருந்து தொகுக்கப்பட்ட சிறிய வீடியோ ஒன்றை பகிர்ந்தார்.
பின்னர் அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேசுகையில், "இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். உலகெங்கிலும் உள்ள பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். சர்வதேச சமூகத்தின் பொறுப்பு உறுப்பினர்களாக இருக்கும் நாங்கள் இந்த அதிர்ச்சிகர சம்பவத்தை நினைவில் கொண்டு, பயங்கரவாதத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டு வந்து நிறுத்துவோம். அது எங்கள் கடமை" என்றார்.
இந்த வீடியோ 1 நிமிடம் 36 வினாடிகள் ஓடுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியுடன் முடிவடைகிறது. "ஒரு தாக்குதல் கூட பல தாக்குதல்களுக்கு சமம். ஒரு உயிரை இழப்பது பல உயிரிழப்புகளுக்கு சமம். தீவிரவாதத்தை வேரறுக்கும் வரை ஓய மாட்டோம்'' என்று மோடி பேசி இருக்கிறார்.
பாகிஸ்தானில் இருந்து கடல் மார்க்கமாக 2008, நவம்பரில், மும்பை நகருக்குள் நுழைந்த 10 பயங்கரவாதிகள், 4 நாட்கள் நகரை சூறையாடி, 26 வெளிநாட்டினர் உட்பட 166 பேரை கொன்று குவித்ததை நாம் மறந்து விடக்கூடாது என, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி, தூதர் ருசிரா காம்போஜ் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டு இருந்தார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளான ஹபீஸ் சயீத், லஷ்கர்-இ-தொய்பா தலைவர் ஷாகித் மொகமத், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சஜித் மிர் ஆகியோரை கறுப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா சமர்ப்பித்த முன்மொழிவுகளை பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.