மத்திய அரசு ஆண்டுக்கு 300 டன் தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. இதனால் அரசின் பெரும்பகுதியான அன்னியச் செலாவணி தங்கத்தை வாங்குவதற்கே செலவாகிறது.

இதைத் தடுக்கவும், தங்கம் இறக்குமதியைக் குறைக்கவும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வந்தது தான் தங்கப்பத்திர முதலீட்டு திட்டம். இதோடு சேர்த்து, தங்க நாணயத் திட்டம், தங்க முதலீட்டு திட்டத்தையும் கொண்டுவந்தார்.

இதில் தங்கத்தை நேரடியாக தங்கமாக வாங்காமல் தங்கத்தின் மதிப்பில் விற்பனை செய்யப்படும் பத்திரங்களை வாங்குவதுதான் தங்கப்பத்திர திட்டமாகும்.

இந்த திட்டம் குறித்த முக்கிய அம்சங்கள் இதோ...

1. தங்கத்தை முதலீடாக கருதுபவர்களுக்கான திட்டம் இது. இதில், இதற்கு முன் குறைந்தபட்சம் 5 கிராம்தான் வாங்க முடியும். இப்போது சிறு முதலீட்டாளர்களை கவரும் விதமாக ஒரு கிராம் ஆக குறைக்கப்பட்டு உள்ளது.

2. இந்த திட்டத்தின் கீழ் 1, 5, 10, 50 & 100 கிராம் தங்கப் பத்திரங்கள் வாங்க முடியும். நிதி ஆண்டில் ஒருவர் அதிகபட்சம் 500 கிராம் தங்கப் பத்திரங்கள் வாங்கலாம்.

3. ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலை ரூ. 2,957 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

4. ஆரம்ப முதலீட்டு மதிப்புக்கு ஆண்டுக்கு 2.50 சதவீதம் வட்டி கிடைக்கும். முதலீட்டு நோக்கில் தங்கமாக வாங்கும்போது உள்ள செய்கூலி, சேதார இழப்பு இதில் இல்லை. தங்கத்தின் விலை ஏற்ற லாபத்துடன் கூடுதலாக ஆண்டுக்கு 2.50 சதவீதம் லாபம் கிடைக்கும்.

5. இந்த தங்கப் பத்திரங்கள் வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் (SHCIL), தபால் அலுவலகங்கள், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்.

6. முதிர்வில் விற்கும்போது கிடைக்கும் லாபத்துக்கு, மூலதன ஆதாய வரி கிடையாது. இந்தப் பத்திரங்கள் டீமேட் மற்று காகித வடிவில் கிடைக்கும்.

7. இந்தப் பத்திரங்களை கடனுக்கு ஜாமீனாக கொடுக்கலாம்.

8. ரூ.20,000 வரையிலான முதலீட்டை ரொக்கப் பணம் மூலமும் மேற்கொள்ளலாம். இதற்கு மேல் என்றால் டிடி, செக், இன்டர்நெட் பரிமாற்றம் தான்.

9. முதிர்வு காலம் 8 ஆண்டுகள் என்றாலும் 5,6,7வது ஆண்டுகளில் வெளியேற முடியும்.

10. இந்தத் திட்டத்தில் பாண்ட் முதலீட்டை திரும்ப பெறும் தங்கமாக தரமாட்டார்கள். இது இந்தியாவில் தங்க பயன்பாட்டை குறைக்க வேண்டும், இந்தியாவின் தங்க இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால் இந்த நிபந்தனை. தங்க பத்திரங்களை திரும்ப ஒப்படைக்கும்போது, முந்தைய வாரத்தின் சராசரி தங்க விலை அடிப்படையில் பணமாக தருவார்கள்.