பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து திமுக எம்.பி., கனிமொழி என்.வி.என் சோமு கேள்விக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளது

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள், அங்கு நடந்த பேச்சுவார்த்தை, அதனால் ஏற்பட்ட விளைவுகள் பற்றி மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி., டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி. முரளீதரன் பதிலளித்துள்ளார். அதில், “வெளிநாடுகளுடன் இணக்கமான உறவை வளர்ப்பதற்கும், இருதரப்பு உறவுகள், மண்டல வாரியான உறவுகள் மற்றும் உலகளாவிய உறவுகளைப் பேணுவதில் இந்தியாவின் பங்களிப்பை உறுதி செய்வதற்கு, உயர்மட்ட அளவிலான வெளிநாட்டுப் பயணங்களும் அதில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளும் உதவுகின்றன. அந்த நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்தவும், அவர்களைப் புரிந்துகொள்ளவும் இந்தப் பயணங்கள் உதவுகின்றன.

நமது சமூகத்தின் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இத்தகைய வெளிநாட்டுப் பயணங்களை இந்தியா பயன்படுத்திக்கொள்கிறது. இந்தப் பயணங்களில் நமது குரலை மட்டும் ஒலிக்காமல், உலகளாவிய அளவில் அனைத்து மக்களுக்குமான அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி பற்றியும் இந்தியா வலியுறுத்துகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தியாவின் கருத்துக்களை வலுவாக எடுத்துவைக்கும்போது, அதே பார்வையுடன் கூடிய கருத்துக்களை சர்வதேச குற்றங்கள், தீவிரவாதம், இணையதளப் பாதுகாப்பு, மின்சாரம், உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்னைகளில் நமது பார்வையை பிற நாடுகள் ஏற்கச் செய்யும் வகையில் இந்தப் பயணங்கள் பயன்படுத்தப்படுகின்றன எனவும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரின் வெளிநாட்டுப் பயனங்களின்போது போடப்படும் ஒப்பந்தங்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் அந்தந்த நாடுகளுடனான உறவை பலப்படுத்துவதுடன், வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் பரஸ்பர பலனைத் தரவும் பயன்படுகின்றன. இது இந்தியாவில் பொருளாதாரம் மற்றும் மக்கள் நலனை உயர்த்தவும் உதவுகிறது.

ஆளுநர் மாளிகையில் இரவு விருந்து: ஸ்டாலின் பங்கேற்கிறார்!

முதலில் அண்டை நாடுகளுடன் சீரான உறவு, கிழக்கத்திய நாடுகளில் வேகமான செயல்பாடு, மேற்கத்திய நாடுகளை வளைகுடா நாடுகளுடன் உறவைப் பேணா வைப்பது, மத்திய ஆசிய நாடுகளை வர்த்தகம் மற்றும் அரசியல் ரீதியாக இணைப்பது, உலக அளவில் அதிகார மையங்களாக செயல்படும் அமைப்புகளுடன் நல்லுறவை வளர்ப்பது போன்றவற்றுகு முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” எனவும் கனிமொழி என்.வி.என். சோமு எம்.பி., கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணமாகியிருக்கிறார். இதில் அமெரிக்கா, பிரான்ஸ், ஐக்கிய அரபு நாடுகளுக்கு இரண்டு முறை பயணமாகியிருக்கிறார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 70 நாடுகளுக்கு பயணமாகியிருக்கிறார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, உஸ்பெகிஸ்தான், இத்தாலி மற்றும் அரபு நாடுகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயணமாகியிருக்கிறார் என மத்திய அரசு அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல இத்தகையை உறவுகளைப் பேணும் வகையில் வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியா வருவதும் தொடர் நடவடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில், கடந்த ஓராண்டில் மாலத் தீவுகள் அதிபர் முதல் ஜப்பான் பிரதமர் வரை சுமார் 13 நாடுகளின் தலைவர்கள் இந்தியாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்து, பல்வேறு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டிருக்கிறார்கள் எனவும் அமைச்சர் முரளீதரன் அளித்துள்ள அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.