இலங்கையில் ஜனநாயகம் தொடர இந்தியா முழுமையான ஆதரவளிக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஜனநாயகம் தொடர இந்தியா முழுமையான ஆதரவளிக்கும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகிய இருவரையும் பதவி விலக கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில, இலங்கையில் நேற்று கடும் வன்முறை வெடித்தது. பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி நேரங்களில், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டத்தை நடத்தினர். அதில் பலர் படுகாயம் அடைந்தனர். இதை அடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் களம் இறக்கப்பட்டது.

இதனால் இலங்கை முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு கலவரம் கட்டுங்கடங்காமல் நடந்து வருகிறது. பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. ஆளும் கட்சியினர் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் ஜனநாயகம் தொடர இந்தியா முழுமையான ஆதரவளிக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் ஜனநாயகம், உறுதித் தன்மை, பொருளாதார மீட்சி ஏற்படுவதை இந்தியா முழுமையாக ஆதரிக்கிறது.

மிக அருகில் உள்ள அண்டை நாட்டுடன் வரலாற்று ரீதியான தொடர்பை இந்தியா கொண்டுள்ளது. அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இலங்கை மக்களுக்கு ரூ.27,000 கோடி மதிப்புள்ள உதவியை இந்தியா இந்தாண்டு வழங்கியது. தற்போதைய இக்கட்டான சூழலில் இருந்து இலங்கை மக்கள் மீண்டு வர இந்தியா உதவி செய்தது. இந்திய மக்களும் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளனர். ஜனநாயக வழியில் இலங்கை மக்கள் எடுக்கும் முடிவுகளை இந்தியா ஆதரித்து வந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்டெடுப்புக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும். ஜனநாயக முறைப்படி இலங்கை மக்களுடைய நலன்களில் இந்தியா எப்போதும் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
