உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் வன்முறை தொடர்பாக கைது  செய்யப்பட்டவரின் வீடு இடிக்கப்பட்டதோடு அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டவரின் வீடு இடிக்கப்பட்டதோடு அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நூபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வெற்றுப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தியும் டெல்லி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், ஜார்கண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். குறிப்பாக ஜார்கண்ட், மேற்கு வங்கம் மாநிலங்களில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின பதற்றமிக்க பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ராஞ்சியில் கடந்த 10ம் தேதி நடந்த கலவரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டக்காரகள் கற்களால் வீசி கலரத்தில் ஈடுபட்டபோது, போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கின்றனர். இதில் சிலர் குண்டு பாய்ந்து காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 10 பேர் போலீஸார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தராகண்ட் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனிடையே, ராஞ்சி உள்பட பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நூபுர் சர்மா சர்ச்சையின் எதிரொலியாக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களும், வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறிவரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் கலவரத்தை அடக்க, மாநில அரசு புல்டோசர் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, உத்தரபிரதேசத்தின் கான்பூர் மற்றும் சஹரன்பூர் என இரண்டு நகரங்களில் கட்டிடங்கள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டு வருகின்றன.

சஹரன்பூரில் நேற்றுமுதல் கலவரம் அரங்கேறிவருகிறது. வன்முறையை தொடங்க காரணமாக கருதப்படும், முஸம்மில் மற்றும் அப்துல் வக்கீர் என்ற இருவரின் வீடுகளையும் முனிசிபல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் புல்டோசர்களை கொண்டு இடித்து தள்ளியுள்ளனர். இதேபோன்ற நடவடிக்கை கான்பூரிலும் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி நடந்த தொழுகைக்குப் பிறகு கான்பூரின் பெகான் கஞ்ச் பகுதியில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் மாஸ்டர் மைண்ட் எனச் சொல்லப்படும் தொழிலதிபர் முகமது இஷ்தியாக் என்பவருக்குச் சொந்தமான கட்டிடத்தை மாவட்ட அதிகாரிகள் புல்டோசரால் இடித்தனர். இவை போன்றே, ஹத்ராஸ், பிரயாக்ராஜ், மொராதாபாத், ஃபெரோசாபாத் மற்றும் அம்பேத்கர்நகர் என உத்தரப்பிரதேசத்தில் வன்முறை பரவிய இடங்களில் புல்டோசர் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது உத்திரபிரதேச அரசு. மேலும், கலவரம் தொடர்பாக 237 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.