உத்தர பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான இங்கு 403 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.
உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
உத்தர பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான இங்கு 403 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. பிப்ரவரி10ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே களம் காண்கின்றன. ஆட்சியை தக்க வைக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேநேரத்தில் இழந்த ஆட்சியை கைப்பற்ற அகிலேஷ்யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரசும் மாநிலத்தில் செல்வாக்கை நிரூபிக்க முயற்சித்து வருகிறது.

இந்நிலையில், முதல்கட்டமாக மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத் நகர், முசாபர்நகர், மீரட், பாக்பத், காஜியாபாத், புலந்த்ஷார், அலிகார், மதுரா மற்றும் ஆக்ரா ஆகிய 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட 58 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடக்கிறது.

முதல் கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மாநில போலீசாருடன் 50 ஆயிரம் துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றம் நிறைந்த தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் பாஜக ஆட்சியமைக்கும் என்றே கூறியுள்ளது. அப்படி பாஜக ஆட்சியமைக்கும் பட்சத்தில் மீண்டும் முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
