உ.பியில் ஆட்சியைப் பிடிக்கிறது பா.ஜ.க..!!! - இந்தியா டுடே கருத்துக் கணிப்பு
உத்தர பிரதேசம்,கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை நேற்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் குறித்த கருத்து கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இதில் பா.ஜ.,வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் இந்தியா டுடே நிறுவனம் உத்தரபிரதேசத்தில் இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது.
இந்த கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. அக்டோபர் மாதம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் 31 சதவீதமாக இருந்த பா.ஜ.,வின் செல்வாக்கு , ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்திற்குப் பிறகு 33 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2012 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ., 15 சதவீதஓட்டுக்களுடன் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
தற்போது இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜ.க, 206 முதல் 216 இடங்களையும், ஆளும் சமாஜ்வாடி கட்சி 92 முதல் 97 இடங்களையும், மாயவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 79 முதல் 85 இடங்களையும், காங்கிரஸ் 5 முதல் 9 இடங்களையும் பிடிக்கும் என தெரியவந்துள்ளது. இதே போன்று ராஷ்டிரிய லோக்தளம், அப்னா தள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து 7 முதல் 11 இடங்களை பிடிக்கும் என அநத கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை பா.ஜ.,வுக்கு ஆதரவு பெருகி வந்தாலும், யார் முதல்வராக வரவேண்டும் என கேள்விக்கு அகிலேசே மீண்டும் முதல்வராக வரவேண்டும் என 33 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளர்களில் ராஜ்நாத் சிங்கிற்கு 20 சதவீதம் பேரும், யோகி ஆதித்யானந்த்திற்கு 18 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.