ஒழுங்கா வேலை பாரு… இல்லைனா…!!! அரசு ஊழியர்களை எச்சரிக்கும் யோகி !!!
ஒழுங்காகக பணிபுரியாத 50 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார்.
உத்தர பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். யோகியின் நடவடிக்கைகள் ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்று வருகின்றன.
விவசாயிகளின் கடன் தள்ளுபடி, பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்றுதல், அரசு அலுவலர்கள் கரெக்ட்டான நேரத்துக்கு அலுவலகம் வர வேண்டும் என பல நடவடிக்கைகள் பாராட்டைப் பெற்றுள்ளன.
அரசு ஊழியர்களை நியமனம் செய்யும் அதிகாரம் கொண்டவர்கள், 50 வயதுக்கு மேலான அரசு ஊழியர்கள் ஒழுங்காக பணியாற்றவில்லை எனில் அவர்களுக்கு காரணம் எதுவும் தெரிவிக்காமல், 3 மாத நோட்டீஸ் அளித்து, கட்டாய ஓய்வில் அனுப்பலாம் என்ற திட்டத்தை செயல்படுத்த யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச தலைமைச் செயலர் ராஜீவ் குமார், அனைத்து துறை செயலர்கள், கூடுதல் செயலர்களுக்கு உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் மார்ச் 31- ஆம் தேதி நிலவரப்படி, 50 வயதை கடந்த அரசு ஊழியர்களின் செயல் திறனை வரும் ஜூலை மாதம் 31- ஆம் தேதி வரை ஆய்வு செய்யும்படிஅறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து துறை தலைவர்களிடமும் கட்டாய ஓய்வில் அனுப்ப வேண்டிய நபர்களின் பட்டியல் தயார் செய்யும்படியும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பட்டியல் இந்த மாத இறுதிக்குள் தயாரிக்கப்பட்டுவிடும் என்றும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டம் செயல்படத்தப்படும் என்றும் தெரிகிறது.