ஜூன் 18-ந்தேதி யு.பி.எஸ்.சி. முதனிலைத் தேர்வு
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் போன்ற இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு இந்த ஆண்டு ஜூன் 18ம் தேதி நடக்கிறது. விண்ணப்பங்களை அனுப்ப மார்ச் 17ம் தேதி இறுதி நாள் ஆகும்.
கடந்த 2014, 2015, 2016ம் ஆண்டுகளில் ஆகஸ்டு மாதத்தில் இந்தத் தேர்வு நடைபெற்றது. இந்த ஆண்டு முன்கூட்டியே ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்த ஆண்டு மொத்தம் 980 பணியிடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இதில் 27 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆனவை.
1985 ஆகஸ்ட் 2ம் தேதியில் இருந்து, 1996 ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் பிறந்தவர்கள் இந்த ஆண்டின் தேர்வை எழுத விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது இளங்கலை பட்டம் பெற்றிருப்பது அவசியம்.
இந்திய குடிமைப்பணி தேர்வானது, முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளை உள்ளடக்கியதாகும். முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, மற்ற இரு தேர்விலும் வெற்றி பெற்றால் தான் பணியை உறுதி செய்ய முடியும்.
பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் முதல் நிலை தேர்வை 6 முறை எழுதலாம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 9 முறை இந்த வாய்ப்பு அளிக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இதில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.