பிரதமரின் விஸ்வகர்மா என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் புதிய திட்டமான “பிரதமரின் விஸ்வகர்மா” திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்கள் தங்கள் கைகள் மற்றும் கருவிகளுடன் பணிபுரியும் பாரம்பரிய திறன்களின் குரு-சிஷ்ய பரம்பரை அல்லது குடும்ப அடிப்படையிலான பயிற்சியை வலுப்படுத்துவதும், வளர்ப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும், விஸ்வகர்மாக்கள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய மதிப்புத் தொடர்களுடன் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதும் இந்தத் திட்டத்தின் இதர நோக்கங்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை, ரூ.1 லட்சம் (முதல் தவணை) வரை வட்டியில்லாக் கடன் உதவி மற்றும் ரூ.2 லட்சம் (இரண்டாம் தவணை) 5 சதவீத சலுகை வட்டி விகிதத்துடன் கடன் வழங்கப்படும். மேலும் இத்திட்டம் திறன் மேம்பாடு, கருவிகளுக்கு ஊக்கத்தொகை, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவையும் வழங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு ஆதரவை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10,000 மின்சார பேருந்துகளை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், தச்சர் (சுதார்); படகு தயாரிப்பாளர்; கவசம் தயாரிப்பவர்; கொல்லர் (லோஹர்); சுத்தியல் மற்றும் கருவிகள் தயாரிப்பவர்; பூட்டு தயாரிப்பவர்; பொற்கொல்லர் (சோனார்); குயவர் (கும்ஹார்); சிற்பி (மூர்த்திகர், கல் தச்சர்), கல் உடைப்பவர்; காலணி தைப்பவர் (சார்மர்)/ காலணி தொழிலாளி/ காலணிக் கைவினைஞர்; கொத்தனார் (ராஜமிஸ்திரி); கூடை / பாய் / துடைப்பம் தயாரிப்பவர் / கயிறு நெசவாளர்; பொம்மை தயாரிப்பவர் (பாரம்பரியம்); முடி திருத்தும் தொழிலாளர் (நயி); பூமாலை தொடுப்பவர் (பூக்காரர்); சலவைத் தொழிலாளி (டோபி); தையல்காரர் (டார்ஸி); மற்றும் மீன்பிடி வலை தயாரிப்பவர் ஆகிய பதினெட்டு பாரம்பரிய தொழில்கள் முதலில் இடம்பெறும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.