unesco recognised chennai as a traditional music city

பாரம்பரிய இசை பங்களிப்புக்காக யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பெற்றுள்ளது. இதற்காக சென்னை மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கமான யுனெஸ்கோ அமைப்பு கைவினைப் பொருள்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை, நகர வடிவமைப்பு, திரைப்படம், கேஸ்ட்ரானமி (உணவைத் தேர்ந்தெடுத்தல், சமைத்தல் மற்றும் உண்ணுதல்), இலக்கியம், ஊடகக் கலை மற்றும் இசை என 7 பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பு கொடுக்கும் நகரங்களை கிரியேட்டிவ் சிட்டீஸ் (படைப்பாக்க நகரங்கள்) என்ற அடைமொழியுடன் அங்கீகாரம் அளிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த 2004-ம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நகரங்களை இந்தப் பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அமைப்பு ஊக்கப்படுத்தி வருகிறது. 

அதன்படி, பாரம்பரிய இசைக்கு சென்னை அளித்து வரும் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் சென்னையையும் யுனெஸ்கோ அமைப்பு சேர்த்தது. 

இந்தாண்டில் சென்னையுடன் சேர்த்து நகர வடிவமைப்புக்காகத் துபாய், இலக்கியத்துக்காகத் தென்னாப்பிரிக்காவின் டர்பன் உள்ளிட்ட 64 நகரங்கள் யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. 

இதற்கு முன்னதாக யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் இந்திய நகரங்களான ஜெய்ப்பூர் மற்றும் வாரணாசி மட்டுமே இடம்பெற்றுள்ளன. கைவினைப் பொருள்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை பிரிவில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், பாரம்பரிய இசைக்காக வாரணாசி ஆகிய இந்திய நகரங்கள் படைப்பாக்க நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

யுனெஸ்கோ அமைப்பின் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் பாரம்பரிய இசைப் பிரிவில் சென்னை சேர்க்கப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த டுவிட்டர் பதிவில், பாரம்பரிய இசைப் பங்களிப்புக்காக யுனெஸ்கோ அமைப்பின் பட்டியலில் இடம்பெற்றதற்காகச் சென்னை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். பாரம்பரிய இசைக்கு சென்னை அளித்துள்ள பங்களிப்பு விலைமதிப்பற்றது. இது நமது நாடே பெருமைகொள்ளும் தருணம் என்று கூறியுள்ளார். 

இதேபோல், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.