மம்தாவை தூக்கியெறிந்த டார்ஜிலிங் - தூக்கிவைத்துக் கொண்டாடும் ஐ.நா
மேற்கு வங்கத்தில் பெண் குழந்தைகளின் கல்விக்காக சிறந்த திட்டங்களை செயல்படுத்தியதற்காக மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ‘கவுரவம் மிக்க பொதுச் சேவை விருதை’ ஐக்கிய நாடுகள் சபை வழங்கி கவுரவித்துள்ளது.
பெண் கல்வி
மேற்கு வங்காளத்தில் பெண்குழந்தைகளின் கல்விக்காக ‘கன்ய பிரகல்பா’ எனும் திட்டத்தை முதல்வர் மம்தா பானர்ஜி செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் படி பெண் குழந்தைகளின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு அரசு அதில் பணத்தை செலுத்தி வருகிறது.
40 லட்சம் மாணவிகள்
இந்த திட்டத்தில் இதுவரை 40 லட்சம் பெண் குழந்தைகள் பதிவு செய்துள்ளனர், ரூ.3,224 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மாநிலத்தில் 16 ஆயிரம் பள்ளி, கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் மாநிலத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதையடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கவுரவம் மிக்க பொதுச்சேவை விருதை ஐ.நா.சபை வழங்கியது. தி ஹேக் சென்ற மம்தா பானர்ஜி நேரடியாக இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.
அறிவிப்பு
ஐ.நா. வௌியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது “ சமூகத்தின் ஏழ்மையான மக்களுக்கும், நலிவடைந்த பிரிவினருக்கும் முழுமையான சேவைகளைச் செய்து, பங்களிப்பு செய்தற்காக இந்து விருந்து மம்தா பானர்ஜிக்கு வழங்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருமை கொள்கிறேன்
மேற்கு வங்காளத்தின் சார்பில் இந்த விருதைப் பெற்ற மம்தா பானர்ஜி கூறுகையில், “ வரலாற்று சிறப்பு மிக்க சாதனை. இந்த நேரத்தில் நான் மேற்கு வங்காள மக்களையும், இந்திய மக்களையும் நினைத்து பெருமைப்படுகிறேன். என்னுடைய அரசு 2030ம் ஆண்டுக்குள் மாநிலத்தில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையும். சமூகத்தின் விளிம்பு நிலை பிரிவினருக்கு தேவையான அரசு சேவைகள் கிடைக்குமாறு செய்யப்படும்’’ எனத் தெரிவித்தார்.
வங்க மொழியை கட்டாயமாக்கியதை எதிர்த்து முதல் அமைச்சர் மம்தா பானர்ஜியைக் கண்டித்து டார்ஜிலிங்கில் நடைபெற்று வரும் நிலையில் ஐக்கிய நாடுகள் சபை அவருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.