கலைக்கப்படுகிறது ‘யு.ஜி.சி.’ ‘ஏ.ஐ.சி.டி.இ.’ புதிதாக ஒரு தனி அமைப்பை கொண்டு வர மோடி அரசு முடிவு...
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக் குழு(யு.ஜி.சி.) அனைத்து இந்திய தொழில்கல்விக்கான குழு(ஏ.ஐ.சி.டி.இ.) ஆகிய 2 உயர்கல்வி நிறுவனங்களை கலைக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.
இந்த இரு உயர்கல்வி நிறுவனங்களை கலைத்துவிட்டு, அதற்கு பதிலாக ‘ஹீரா’(எச்.இ.இ.ஆர்.ஏ.) எனச் சொல்லப்படும் உயர்கல்விக்கான அதிகாரமிக்க ஒழுங்குமுறை ஆணையத்தை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது.
ஏ.ஐ.சி.டி.இ.
மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ்வரும் ஏ.ஐ.சி.டி.இ எனப்படும் அனைத்து இந்திய தொழில்கல்விக்கான குழு என்பது கடந்த 1945ம் ஆண்டு நவம்பர் மாதம் உருவாக்கப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து தொழிற்கல்விக்கான பாடங்களுக்கு அனுமதியளித்தல், கண்காணித்தல், நிதி உதவி அளித்தல் உள்ளிட்ட பல பணிகளைச் செய்து வருகிறது.
யு.ஜி.சி.
அதேபோல, யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வருகிறது. கடந்த 1958, டிசம்பர் 28-ந் தேதி இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. நாட்டில் உள்ள பல்கலைகளை கண்காணித்தல், புதிய பல்கலைக்கு அனுமதி வழங்குதல், நிதி அளித்தல், ஒழுங்குபடுத்துதல், உள்ளிட்ட பலபணிகளைச் செய்து வருகிறது.
50 ஆண்டுகளுக்கு மேல்
அரைநூற்றாண்டுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்த இரு உயர்கல்வி அமைப்புகளையும் கலைக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. இந்த இரு அமைப்புகளின் பணிகளையும் ஒருங்கிணைத்து புதிதாக ‘ஹீரா’(எச்.இ.இ.ஆர்.ஏ.) எனச் சொல்லப்படும் உயர்கல்விக்கான அதிகாரமிக்க ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க இருக்கிறது.
இது தொடர்பாக பல கல்வியாளர்கள், நிபுனர்களுடன் பிரதமர் மோடி கடந்த மார்ச் மாதமே ஆலோசனை நடத்திவிட்டார். ஆனால், இது தொடர்பாக முடிவு எடுத்தல் மட்டும் தள்ளி போடப்பட்டது.
பணிகள் வேகம்
இந்நிலையில் இப்போது இந்த ஹீரா நிறுவனத்தை உருவாக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான சட்டவிதிமுறைகள் உருவாக்கும் பணிகள் வேகமெடுத்துள்ளன.
இது குறித்து மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ. ஆகியவற்றை கலைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டவிதிகளை உருவாக்கும் முயற்சியில் மனித வளத்துறை அமைச்சகமும், நிதி அயோக்கும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கான குழுவில் நிதி அயோக் தலைவர் அமிதாப் காந்த், உயர்கல்வித்துறை செயலாளர் கே.கே. சர்மா இடம் பெற்றுள்ளனர்.
சீர்திருத்தம்
புதிதாக கொண்டுவரப்படும் ‘ஹீரா’(எச்.இ.இ.ஆர்.ஏ.) ஆணையம் உயர்கல்வித்துறையில் ஒரு சீர்திருத்தத்தை உருவாக்கும். அதன் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் தடைகளை நீக்கி, உயர்கல்வியை ஒழுங்குபடுத்தும்.
இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப்பட்ட ஹரி கவுதம் கமிட்டி, யாஷ்பால் கமிட்டியும் இதே போன்ற பரிந்துரையை அளித்தார்கள் ஆனால், சீர்திருத்தம் ஏதும் நடக்கவில்லை. சர்வதேச தரத்துக்கு ஏற்பட கல்வி முறைகள், பாடங்கள் மாற்றி அமைக்கப்படும். யு.ஜி.சி. முலம் சில கல்வி நிறுவனங்கள் கொடுமைப்படுத்தப்படுவதுஹீரா அமைப்பால் தடுக்கப்படும். அதே சமயம், தேவைப்பட்டால் உயர் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அமைப்பாக ஹீரா இருக்கும்’’ எனத் தெரிவித்தார்.