சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடிக்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், முதற்கட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள தமிழ்நாட்டுக்கு அடுத்தடுத்து வருகை புரிந்து பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக ஆளுநர் ரவி மீது கோவை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார்!

அந்த வகையில், சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி இந்து தர்மத்திற்கு எதிராக செயல்படுகிறது. இந்து மதத்தை பற்றி விமர்சிக்கும் இந்தியா கூட்டணி வேறு மதத்தையோ, மற்ற மதத்தையோ பற்றி விமர்சித்து பேசுவதே இல்லை. இந்து மதத்தை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்துபோய் இருக்கிறார்கள். இந்து மக்களின் அடையாளத்தை நான் இருக்கும் வரை அழிக்க விடமாட்டேன். இந்தியா கூட்டணி கட்சிகள் இந்து மதத்திற்கு எதிராக பேசுகின்றனர். அவர்கள் அழிந்து போவார்கள். எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கி விட்டது.” என்றார்.

இந்த நிலையில், சேலம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடிக்கு எதிராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடி மத அடிப்படையில் வாக்குகளை சேகரித்ததாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அளித்துள்ள புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.