ரயில் தடம் புரண்டு விபத்து - 2 பேர் பலி, 28 பேர் காயம்
கான்பூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 5.20 மணிக்கு ரயில் எண் 12988 சீல்டா-அஜ்மீர் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 15 பெட்டிகள் தண்டவாளத்தில் இறங்கி தடம்புரண்டன. இதில் 2 பெட்டிகள் கால்வாயில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் ரயிலில் தூங்கிக் கொண்டிருந்த பலர் காயமடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொத்தம் 15 பெட்டிகள் தடம் புரண்டுள்ளது, அதில் முதல் 5 பெட்டிகளும், கடைசி 3 பெட்டிகளும் சேதமாகாமல் உள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுக்கள் சென்றுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறது என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.
இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 28 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தடம்புரண்ட ரயில் பெட்டிகளை சீரமைக்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.
இந்த விபத்தையடுத்து அவ்வழியாக செல்லும் சில ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. அதாவது, பல்வால் (PWL) - ஜான்சி சி பி (JCO), இடையே செல்லும் ரயில்களின் எண் 12826, 12382 மற்றும் மொராதாபாத் (MB) - ஜான்சி சி பி (JCO) இடையே செல்லும் ரயில்களின் எண் 12312, 12488 ஆகியவையாகும்.
மேலும் இந்திய ரயில்வே உதவி தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.
கான்பூர்: 0512-2323015, 2323016, 2323018
அலகாபாத்: 0532-2408149, 2408128, 2407353
துண்டல: 05612-220337, 220338, 220339
அலிகார்ஹ்: 0571-2404056, 2404055