Asianet News TamilAsianet News Tamil

வங்கியில் டெபாசிட் செய்ய இன்று கடைசி நாள்…செல்லாத ரூ.1000, ரூ.500 நோட்டுகள்

today last-day
Author
First Published Dec 30, 2016, 6:31 AM IST
வங்கியில் டெபாசிட் செய்ய இன்று கடைசி நாள்…செல்லாத ரூ.1000, ரூ.500 நோட்டுகள்

 

மத்தியஅரசு செல்லாது என அறிவித்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கியில்டெபாசிட் செய்வதற்கு இன்று கடைசிநாளாகும்.

இந்த வாய்ப்பை தவறவிட்டால் அடுத்து ரிசர்வ் வங்கியில் மட்டுமே கொடுத்து மட்டுமே மாற்ற முடியும் என்பதால், நாடுமுழுவதும் உள்ள பெரும்பாலான அரசு, தனியார் வங்கிகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இன்றும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

ரூபாய் தடை

நாட்டில் உள்ள கருப்பு பணத்தையும், கள்ள நோட்டையும் ஒழிக்க புழக்கத்தில் 86 சதவீதம் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம்  8-ந்தேதி அறிவித்தார். அப்போது அறிவிக்கும்போது ஏறக்குறைய ரூ.15.40 லட்சம் கோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகள் இருந்தன.

கட்டுப்பாடுகள்

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் கையில் உள்ள பழைய நோட்டுகளை மாற்றவும், டெபாசிட் செய்யவும் வங்கிகளுக்கு படையெடுத்தனர். டிசம்பர் 30-ந்தேதி வரை செல்லாத ரூபாய்களை வங்கியில் டெபாசிட் செய்ய மக்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டது

ஏ.டி.எம்.களில் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ.2,500 , வங்கிகளில் இருந்து வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என பல்வேறு கட்டுப்பாடுகளை ரிசர்வ்வங்கி விதித்தது.

கடும் சிரமம்

இந்த கட்டுப்பாடும், பணத்தட்டுப்பாடும் ஏழை-எளிய, நடுத்தர மக்களையும், தொழிலாளர்களையும் கடுமையாக பாதித்தது. வங்கிகளுக்கு போதுமான அளவு புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகள் வினியோகிக்கப்படாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

தங்கள் சொந்த பணத்தை எடுக்க பல மணி நேரம் வங்கி முன்பு வரிசையில் காத்து நின்றாலும் தேவையான பணத்தை பெற முடியவில்லை. பணத்தட்டுப்பாடு காரணமாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த அளவிலேயே பணம் வழங்கப்பட்டது. மாத கணக்கில் ஏ.டி. எம்.கள் முழுமையாக செயல்படாமல் முடங்கி கிடப்பதால் மக்களின் அவசர செலவுகளுக்கு பணம் எடுக்க முடியவில்லை.

100-பேர் பலி
வங்கிகளில் மட்டுமே பணம் பெற வேண்டிய நிலை நீடித்து வருவதால் வாடிக்கையாளர்கள் கூட்டம் குறையவில்லை. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்,ஓய்வூதியதாரர்கள், வங்கி கணக்கில் இருந்துதான் பணம் பெற வேண்டிய நிலை உள்ளது. இதனால் வங்கிகளில் பணம் எடுப்பதற்கு மக்கள் பல மணி நேரம் காத்து கிடக்கின்றனர். இப்படி காத்துக்கிடந்தவர்களில் ஏறக்குறைய 100க்கும் மேற்பட்டோர் மன அழுத்தம், உடல்நலக்குறைவு காரணமாக விழுந்து இறந்தனர்.

விடிவு எப்போது?

புதிய ரூ.500 நோட்டு புழக்கம் அதிகமானால் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புதிய 500 ரூபாய் நோட்டுகள் தாராளமாக வினியோகிக்கப்படாததால் சில்லரை தட்டுப்பாடு பிரச்சனையும் தீரவில்லை.

கடந்த 50 நாட்களாக நீடித்து வரும் பணப்பிரச்சனையில் இருந்து எப்போது விடிவு கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

இன்று கடைசி

இந்த நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கடைசி வாய்ப்பு இன்றுடன் முடிகிறது. அதன்பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் கையில் வைத்திருந்தால் அவற்றை  ரிசர்வ் வங்கியில் கொடுத்து அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை மாற்றிக் கொள்ள முடியும்.

கெடுபிடி

ஆனால், அதற்கு பல விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும், அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். விளக்கங்களை எழுத்து பூர்வமாக பெற்றுக் கொண்டு தான் பழைய நோட்டினை பெறுவார்கள்.

வரிசை

இந்த காரணத்தால், நாடுமுழுவதும் உள்ள வங்கிகளில் மக்கள் செல்லாத ரூபாய்களை தங்கள் கணக்கில் டெபாசிட் செய்ய அதிக அளவில் குவிந்தனர். வழக்கமாக பணம் எடுப்பதற்கு தான் வாடிக்கையாளர்கள் காத்து நிற்பார்கள். ஆனால் நேற்று மும்பை, கொல்கத்தா, சென்னை, டெல்லி, உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கணக்கில் டெபாசிட் செய்வதற்காக பலர் வரிசையில் காத்து நின்றனர்.

ரிசர்வ் வங்கிக்கு சென்றால் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது வரும் என்பதால் அத்தகைய சிக்கலான நடவடிக்கையை விரும்பாத சிலர் இன்று வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற வந்தனர். அரசு வங்கிகளில் மட்டுமின்றி தனியார் வங்கிகளிலும் பழைய ரூபாய் நோட்டுகள் நேற்று அதிகளவு டெபாசிட்செய்யப்பட்டன.

 

 

 

 

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios