திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதத்திற்கான இலவச தரிசன டிக்கேட் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கேட் நாளை ஆன்லைனில் வெளியிடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த மாதத்திற்கான திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் நேற்று முன்தினம் காலை வெளியிடப்பட்டது. 4.52 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட 20 நிமிடத்தில் விற்று தீர்ந்தன. ஜனவரி மாதத்திற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜனவரி 1 முதல் 12-ந்தேதி 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகளும், 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை 5 ஆயிரம் தரிசன டிக்கெட்டுகளும் 23-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 10 ஆயிரம் டிக்கெட்டுகள் என 1.60 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது. பக்தர்கள் ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகளை பதிவு செய்துகொள்ள வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் 5 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் கவுண்டர்களில் விநியோகிக்க தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் என்று கூறப்படும் பரமபத வாசல் திறந்திருக்கும். எனவே அடுத்த மாதம் 13 ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலும், ஜனவரி மாதத்தின் மற்ற நாட்களில் தினமும் 10,000 என்று எண்ணிக்கையிலும் இலவச தரிசன டோக்கன் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது
திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த இருக்க வேண்டும் அல்லது தரிசனத்திற்கு வருவதற்கு 48 நேரத்திற்கு முன்பாக எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி மற்றும் நெகட்டிவ் சான்றிதழ் இல்லாமல் வரும் பக்தர்கள் அலிபிரி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுகின்றனர். எனவே பக்தர்கள் தரிசனத்திற்கு வரும் முன்பாக கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழுடன் வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதியில் ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
இதனிடையே திருப்பதியில் நேற்று மட்டும் 38 ஆயிரத்து 160 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் 15 ஆயிரத்து 728 பேர் முடி காணிக்கை செலுத்தியதாகவும் ரூ.2.73 கோடி உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது .
