Threat to constitutional law by BJP
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களால் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதை மக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் ஒன்றாக இணைந்து பாதுகாக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் 133-வது ஆண்டு விழாவில் அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அனந்த குமார் ஹெக்டே, “ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவோம்’’ என்று பேசி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக ராகுல் காந்தி பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி கடந்த 1885, டிசம்பர் 28-ந்தேதி ஆலம் ஆக்டேவியன் ஹியூம் என்பவரால் தொடங்கப்பட்டது. அந்த கட்சி தொடங்கப்பட்டு 133-வது ஆண்டு விழா டெல்லியில் அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவரும் மாநிலங்கள் அவை எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்தபின் தொண்டர்களுக்கும், காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது-
நாட்டின் உச்சபட்சமாக, அடிப்படை கட்டமைப்பாக இருக்கக் கூடிய அரசியலமைப்புச் சட்டம் அச்சுறுத்தலில் இருக்கிறது. பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களால் நேரடியாகவே அரசியலமைப்புச் சட்டத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தலில் இருந்து காக்க வேண்டிய கடமை என்பது ஒவ்வொரு இந்தியனின், காங்கிரஸ் தொண்டரின் கடமையாகும்.
உண்மைக்கு மாறான விஷயங்களை கூறி ஒருவரை ஏமாற்றுவதுதான் இன்று நாட்டில் நடந்து வருகிறது. அரசியல் ஆதாயம் அடைவதற்காக பா.ஜனதா கட்சி பொய்களை கூசாமல் அள்ளி வீசுகிறது. இதில் பா.ஜனதா கட்சியில் இருந்து நாம் வேறுபட்டு இருக்க வேண்டும். நாம் தேர்தலில் சிறப்பாக செயல்படாமல் இருந்தருக்கலாம், தோல்விகூட அடைந்திருக்கலாம், ஆனால், உண்மையை ஒருபோதும் நாம் கைவிட்டு விடக்கூடாது
இவ்வாறு அவர் பேசினார்.
உயிர்நீத்தவர்களுக்கு மரியாதை
காங்கிரஸ் மூத்ததலைவரும் மாநிலங்கள் அவை எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் நாடாளுமன்றத்துக்கு வெளியே கூறுகையில், “ காங்கிரஸ் கட்சியின் நிறுவிய ஆண்டில் நாட்டுக்காக உயிர் நீத்த காங்கிரஸ் கட்சியின் ஆண், பெண் தொண்டர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம். ஆனால், இந்த நாட்டுக்குள்ளே யே இருக்கும் சில சக்திகள், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்று முயற்சிக்கின்றன. நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்றார்.
