இது பட்டப்பகல் கொள்ளை.. ஏர் இந்தியா விற்பனையில் நடந்தது என்ன..? புட்டுப்புட்டு வைத்த சீதாராம் யெச்சூரி.!
நாட்டின் தேசிய சொத்துகளை மத்திய அரசு இடைவிடாமல் கொள்ளையடித்து வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை ஏலத்தில் டாடா நிறுவனம் வாங்கியது. ரூ.18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியாவை டாடா வாங்கியது. பொதுத்துறை நிறுவனத்தை விற்பனை செய்ததற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “நாட்டின் தேசிய சொத்துகளை மத்திய அரசு இடைவிடாமல் கொள்ளையடித்து வருகிறது. ஏர் இந்தியாவை ரூ.18 ஆயிரம் கோடிக்கு டாடா நிறுவனத்துக்கு மத்திய அரசு விற்றுள்ளது. இது, டாடாவுக்கு மோடி அரசு அளித்த இலவச பரிசு போன்றதுதான். பட்டப்பகலில் நடக்கும் கொள்ளையை போல் இது நடந்துள்ளது.
ஏர் இந்தியாவின் கடனில் டாடா நிறுவனம் ரூ.15 ஆயிரத்து 300 கோடி கடனை ஏற்றுக்கொண்டாலும், அது மறுசீரமைக்கப்பட்டுவிடும். எஞ்சிய ரூ.2 ஆயிரத்து 700 கோடியை மட்டுமே மத்திய அரசுக்கு டாடா நிறுவனம் கொடுக்கும். ஏர் இந்தியாவின் மீதி கடன் மட்டுமே ரூ.46 ஆயிரத்து 262 கோடி. இந்தக் கடனை மத்திய அரசுதான் ஏற்க வேண்டியிருக்கும். இந்தக் கடன் பொதுமக்கள் தலையில்தான் சுமத்தப்படும். ஆனால், ஏர் இந்தியா வாங்கிய சொத்துகள் எல்லாம் டாடா நிறுவனத்துக்கு சொந்தமாகி விடும்.” என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.