இன்ஸ்பெக்டர் நாற்காலியில் பெண் சாமியார் ராதே மா - போலீசார் மீது விசாரணை நடத்த உத்தரவு...
தன்னை கடவுளின் மறுஅவதாரம் என சொல்லிக்கொண்டு இருக்கும் பெண் சாமியார் ராதே மா,டெல்லி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் நாற்காலியில் அமர்ந்த விவகாரம் சர்ச்சையாக உருவாகியுள்ளது.
சாமியார் ராதே மா முன், கைகட்டி, நின்ற இன்ஸ்பெக்டர், போலீசார் மீது விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடவுளின் தூதுவர் எனச் சொல்லி ஆதரவாளர்களை வைத்து இருப்பவர் பெண் சாமியார் சுக்விந்தர் கவுர் என்ற ராதே மா. இவர் டெல்லியில் ராம் லீலா நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு விவேக்விகார் போலீஸ் நிலையம் வழியாக வந்துள்ளார்.
அப்போது, அந்த போலீஸ் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் சஞ்சய் சர்மா, சாமியார் ராதே மாவின் வாகனத்தை வழிமறித்து தேவைப்பட்டால் தனது போலீஸ் நிலையத்தில் ஓய்வு எடுத்து, கழிவறையை பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் கேட்டுள்ளார்.
இதையடுத்து, விவேக் விகார் போலீஸ் நிலையத்துக்கு சாமியார் ராதே மா சென்றுள்ளார். இவரை வரவேற்ற போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சஞ்சய் சர்மா தனது இருக்கையில் ராதே மாவை அமரவைத்து உபசரித்துள்ளார்.
தன்னை அமரவைத்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு சாமியார் ராதே மா சால்வை ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சாமியார் ராதே மா இருக்கையில் அமர்ந்திருக்க, போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சய் சர்மா கைகட்டி பணிவுடன் போஸ் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதங்களில் படுவேகமாக பரவி வருவதால் டெல்லி போலீசாருக்கு மிகப்பெரிய தலைகுணிவு ஏற்பட்டுள்ளது.
மேலும், டெல்லி கிராண்ட் டிரங்க் பகுதி போலீஸ் நிலையத்தில் இருந்து ராம்லீலா நிகழ்ச்சியில் பாதுகாப்புக்காக வந்த 5 போலீசார் வந்திருந்தனர். அவர்களை தேசபக்தி பாடல்களை பாடவைத்து அதையும் சாமியார் ராதே தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இந்த புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து, டெல்லியில் உள்ள மூத்த போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கிழக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் ரவிந்திர யாவத் கூறுகையில், “ சாமியார் ராதே மா முன்பு கை கட்டி நின்று புகைப்படம் எடுத்த விவேக் விகார் போலீஸ் இன்ஸ்பெக்டர், 5 போலீசார் மீது விசாரணஐ நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. துணை கமிஷனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி இதை விசாரிப்பார்’’ எனத் தெரிவித்தார்.