பாஜக தேசியத் தலைவரான ஜே.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கு இன்று ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது.

உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலைநகர் கீவில் இணையதள சேவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளை ரஷிய படைகள் நேற்று தாக்கின. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கீவ் நகரில் இருந்து வெளியேறினர். ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்தனர். இன்று காலை உக்ரைனின் மற்றொரு பெரிய நகரமான கார்கிவ்வுக்குள் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளனர். ஹேக் செய்த பின்னர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒன்றன் பின் ஒன்றாக ரஷ்யா, உக்ரைன் உதவி தொடர்பான ட்வீட்களை ஹேக்கர்கள் பதிவிட்டனர். அதில், ‘உக்ரைனுக்கு நன்கொடை அளிக்க வேண்டும், ஏனெனில் அவர்களுக்கு உதவி தேவை. எனது கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என்றும் எழுதப்பட்டுள்ளது. 

அனைத்து நன்கொடைகளும் உக்ரைன் அரசாங்கத்திற்கு வழங்கப்படும்' என எழுதப்பட்டு இருந்தது. இதற்கிடையில் ஹேக் செய்யப்பட்ட நட்டாவின் ட்விட்டர் கணக்கு மீட்டெடுக்கப்பட்டது. முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டது. அதில், பிட்காயினை இந்தியா அதிகாரப்பூர்வமாக சட்டப்பூர்வமாக்கியுள்ளதாக ட்வீட் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.