ஐஐடி சென்னை படிப்பை உதறிவிட்டு ராணுவத்தில் சேர்ந்த நிஜ ஹீரோ... ராயல் சல்யூட் சார்.!
"நான் சென்னை ஐஐடி நுழைவுத் தேர்வில் 13-வது ராங்க் பெற்றேன். பின்னர் சென்னை ஐஐடியிலிருந்து விலகி தேசிய ராணுவ அகடாமியில் சேர்ந்தேன். 39 ஆண்டுகள் நான் ராணுவத்தில் இருந்திருக்கிறேன்."
சென்னை ஐஐடி படிப்பை உதறி தள்ளிவிட்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்த ராணுவ அதிகாரி பேசிய காணொலி வைரலாகி வருகிறது.
ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் அனில் சோப்ரா, இந்திய ராணுவத்தில் போற்றுதலுக்குரிய அதிகாரிகளில் ஒருவர். 1973-ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்த அவர், 2012-ஆம் ஆண்டில் ஏர் மார்ஷல் ராங்கில் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு லக்னோவில் உள்ள ராணுவ படை தீர்ப்பாய அமர்வில் பணிக்கு சேர்ந்தார். 2017-ஆம் ஆண்டோடு அந்தப் பதவி முடிவுக்கு வந்தது. ராணுவ அதிகாரியாக இருந்தபோது பரம்வீர் விஷிட் சேவா பதக்கம் உள்பட 10 பதக்கங்களைப் பெற்றவர்.
இந்நிலையில் அவருடைய காணொலி காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இளம் ராணுவத்தினருக்கு அறிவுரை வழங்கி அந்தக் காணொலியில், “என்னுடைய மோட்டிவேசன் என்பது, நான் சென்னை ஐஐடி நுழைவுத் தேர்வில் 13-வது ராங்க் பெற்றேன். பின்னர் சென்னை ஐஐடியிலிருந்து விலகி தேசிய ராணுவ அகடாமியில் சேர்ந்தேன். 39 ஆண்டுகள் நான் ராணுவத்தில் இருந்திருக்கிறேன். நான் முழு வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். எந்த இடமாக இருந்தாலும் சரி, எந்தக் கல்லூரியாக இருந்தாலும் சரி, எந்தத் தகுதியாக இருந்தாலும் சரி, உங்கள் பணியைச் சரியாக செய்யுங்கள். ராணுவம் உங்களுக்கு வாழ்க்கையைக் கொடுக்கும்.” என்று பேசியிருக்கிறார்.
இந்தக் காணொலியை பலரும் பகிர்ந்துவருகிறார்கள். ஐஐடியில் கிடைத்த படிப்பை விட்டுவிட்டு, ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவையாற்றிய அவரைப் பலரும் வாழ்த்தியும் பாராட்டியும் பதிவிட்டு வருகிறார்கள். மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் அவருடைய காணொலியை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். “இந்த வீடியோ ஏற்பத்திய ஈர்ப்பைப் போல, இந்தியாவின் தேசியக் கொடிக்காக மடங்குவதை என் கைகள் நிறுத்தாது. அது ஒரு வாழ்க்கையை வாழ்வது” என்று குறிப்பிட்டுள்ளார்.