The plane crashed into a wild boar on the runway
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் விமான நிலைய ஓடுபாதையில் திடீரென புகுந்த காட்டுப்பன்றி மீது ‘டேக் ஆப்’ ஆகிய விமானம் மோதியது. விமானியின் சாமர்த்தியத்தால் ெபரிய விபத்து தவிர்க்கப்பட்டு, 150 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
விசாகப்பட்டினம் விமானநிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு, இன்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான 6இ-742 என்ற விமானம் ஐதராபாத்துக்கு புறப்பட்டது. ஓடுபாதையில் ஓடத் தொடங்கி, விமானம் ‘டேக் ஆப்’ ஆனபோது, திடீரென ஓடுபாதையில் ஒரு பெரிய காட்டுப்பன்றி குறுக்கிடுவதை விமானி பார்த்தார்.
விமானம் ‘டேக் ஆப்’ ஆகும் நிலையில் இருந்ததால், அதை தரையிறக்கவும் முடியவில்லை, மோதாமல் தவிர்க்க முயற்சித்தும் விமானத்தின் பின்சக்கரங்கள் பன்றி மீது மோதியது. இதில் பின்சக்கரம் சேதமடைந்த போதிலும், விமானம் வானில் பறந்தது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் அளித்து உடனே தரையிறங்க அனுமதி கேட்டனர். தற்போது விமானத்தில் அதிக அளவு எரிபொருள் இருப்பதால், உடனடியாக தரையிறங்குவது மிகப்பெரிய ஆபத்து என கட்டுப்பாட்டு அறை மூலம் தெரிவிக்கப்பட்டது. இதனால், எரிபொருள் குறையும் வரை ஏறக்குறைய 45 நிமிடங்களுக்கு மேலாக விமானம் வானில் வட்டமிட்டது.
அதன்பின், விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் விமானம் மிகவும் கவனமாக தரையிறக்கப்பட்டது. தரையிறங்கும் போது விபத்து ஏதும் நடக்கக்கூடாது , தீவிபத்து நடந்தால் உடனடியாக அணைக்க தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை செய்யப்பட்டன.
விமானத்தின் பின்சக்கரம் பழுதடைந்த நிலையிலும், விமானி மிகவும் சாமர்த்தியமாக விமானத்தை இரவு 11.15 மணிக்கு தரையிறக்கினார். இதையடுத்து உடனடியாக பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, மாற்று விமானம் மூலம் ஐதராபாத்அனுப்பப்பட்டனர்.
இது குறித்து இன்டிகோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ விசாகப்பட்டினத்தில் இருந்து ஐதாராபாத் சென்ற எங்களின் 6இ-742 என்ற விமானம் ஐதராபாத்துக்கு புறப்பட்டபோது, ஓடுபாதையில் வந்த காட்டுப்பன்றி மீத மோதியது. இருப்பினும், விமானியின் சாமர்த்தியமான செயலால், விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு, ஐதராபாத் அனுப்பப்பட்டனர்’’ என்று தெரிவிக்கப்பட்டது.
