கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக இன்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படுவதாக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் தொற்று பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகிறது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் உயிரிழந்துள்ளார். தொற்று பாதிப்பு நேற்றை விட 50 சதவீதம் இன்று அதிகரித்துள்ளது டெல்லி மக்களை கலக்கம் அடையச் செய்துள்ளது. ஜூன் 2 ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாளில் ஏற்படும் அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவேயாகும். டெல்லியில் நேற்று 331- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதேபோல், புதிதாக 142 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஒமைக்ரான் கொரோனா பரவல் காரணமாக டெல்லியில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிகள்,கல்லூரிகள் , திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு அரங்குகளை உடனடியாக மூட டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் டெல்லியில் மெட்ரோ, உணவகங்கள், மதுபான கூடங்கள் 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட அரசு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

டெல்லியில் ஒமைக்ரான், கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியல் கூட்டங்கள், மத விழாக்கள், கொண்டாட்டங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகத்திலுள்ள கடைகளை திறப்பதிலும் டெல்லி அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.