The death of doctors in Bihar has caused a shock of 13 deaths in a single day without proper treatment.
பீகாரில் மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் ஒரே நாளில் உரிய சிகிச்சை கிடைக்காமல் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சில நாட்களுக்கு முன்பு நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்த இளநிலை மருத்துவரை உயிரிழந்தவரின் உறவினர்களின் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனால் இளநிலை மருத்துவர்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி அங்குள்ள 500க்கும் மேற்பட்ட இளநிலை மருத்துவர்கள் நேற்றிலிருந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக 36 அறுவைசிகிச்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக வரும் நோயாளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் நோயாளிகள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தால் உரிய சிகிச்சை கிடைக்காமல் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆனால் மூத்த மருத்துவர்கள் அவசர சிகிச்சைப்பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் நோயாளிகளுக்கு நர்ஸ்கள் அவசர சிகிச்சை வழங்கி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
