மணிப்பூர் மக்களுடன் நாடு நிற்கிறது என சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ஆம் தேதி இனக்கலவரம் வெடித்தது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் வெடித்த வன்முறை காரணமாக அம்மாநிலம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மணிப்பூர் வன்முறையில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதனிடையே, கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாவட்டத்தின் காங்க்போக்பி மாவட்டத்தில், குகி பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பெண்கள் வன்முறை கும்பலால் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதில், வயதுள்ள ஒரு இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மணிப்பூர் விவகாரம் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. பிரதமர் மோடி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால், குறுகிய கால விவாதம் மட்டுமே நடத்த தயாராக இருப்பதாக மத்திய பாஜக அரசு அறிவித்தது. மேலும், மணிப்பூர் வன்முறை வெடித்து பல மாதங்கள் ஆன நிலையில், பெண்கள் நிர்வாண வீடியோ வெளியான பின்பு, வெறும் சில நொடிகள் மட்டுமே பிரதமர் அதுகுறித்து பேசியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

Scroll to load tweet…

இதனால், பிரதமர் மோடியை அவைக்கு வரவழைக்கும் பொருட்டு ஆளும் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானம் தோல்வியில் முடிந்தது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, மணிப்பூரை இரண்டாக்கி விட்டீர்கள் எனவும், மணிப்பூர் குறித்து உங்களுக்கு அக்கறை இல்லை எனவும், பாரத மாதாவை கொன்று விட்டீர்கள் எனவும் காட்டமாக விமர்சித்தார்.

77-வது சுதந்திரன தினம்: டெல்லி செங்கோட்டையில் 10-வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

இந்த நிலையில், 77ஆவது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டுகோள் விடுத்தார். அப்போது பேசிய அவர், “மணிப்பூர் மக்களுடன் நாடு நிற்கிறது. அமைதியின் மூலமே அங்கு தீர்வு காண முடியும். மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.” என்றார்.

இயற்கை பேரிடர் நாட்டின் பல பகுதிகளில் கற்பனை செய்ய முடியாத நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.