கணக்கில் வராத டெபாசிட்டுக்கு 50% ; பிடிபட்டால் 85% வரி
கருப்பு பணம் பதுக்குவோர்கள் தாமாக முன்வந்து வருமான வரித்துறையினரிடம் வருமானத்தை தெரிவித்து பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் அபராதம், வரி மற்றும் கூடுதல் வரி என 50 சதவீதம் வரியும், வருமான வரித்துறை கண்டுபிடித்தால் 85 சதவீதம் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான வருமானவரிச் சட்டத்திருத்த மசோதாவை நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்ற மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார்.
நாட்டில் கருப்பு பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி, கடந்த 8-ந்தேதி ரூ.500, ரூ1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத்தொடர்ந்து, மத்தியஅரசு பல்வேறு அறிவிப்புகளை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. டிசம்பர் 30-ந்தேதி வரை ஒருவர் தனது வங்கிக்கணக்கில் ரூ.2.5 லட்சத்து மேல் டெபாசிட் செய்தால் வருமான வரித்துறையின் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என அரசு எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், கருப்பு பணம் பதுக்குவோர் சிலர், அப்பாவி மக்களைப் பயன்படுத்தி அவர்களின் வங்கிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து வரும் தகவல்கள் அரசுக்கு கிடைத்தது. இதையடுத்து, திடீரென வருமானத்துக்கு தொடர்பில்லாத வகையில் டெபாசிட்கள் அதிகரித்துள்ள வங்கிக்கணக்குகளை தீவிரமாக கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், வருமான வரிச் சட்டத்திலும் திருத்தம் கொண்டு வந்து, கருப்பு பணம் பதுக்குவோர்களுக்கு கிடுக்கிப்பிடி போட திட்டமிட்டு, கடந்த வாரம் பிரதமர் மோடி, அமைச்சரவையைக் கூட்டி இது தொடர்பாக ஆலோசித்தார்.
இதன்படி, நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, நேற்று மக்களவையில் வருமான வரிச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் மசோதாவை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில் கூறியிருப்பதாவது-
செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ1000 நோட்டுகளை ஒருவர் வருமானத்துக்கு தொடர்பில்லாமல் டெபாசிட் செய்து, அதை வருமான வரித்துறையினருக்கு தாமாக முன்வந்து தெரிவிப்பவர்கள், அந்தபணத்தில் 25 சதவீதத்தை வறுமைக்கு ஒழிப்புத் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு வட்டி இல்லாமல் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த 4 ஆண்டுகளுக்கு அதை எடுக்க முடியாது. மேலும், பிரதமர் மந்திரிகிராபி கல்யான் யோஜனா திட்டத்தில் கணக்கில் வராத வருமானத்தில் 30 சதவீதத்தை வரியாகச் செலுத்த வேண்டும். மேலும், கணக்கில் வராத வருவாய்க்கு 10 சதவீதம் அபராதம், கூடுதல் வரி 33 சதவீதம் உள்ளிட்ட 50 சதவீதம் வரி விதிக்கப்படும்.
கணக்கில் வராத பணம் வைத்திருப்பவர்களை வருமான வரித்துறையே கண்டுபிடித்தால், வருமானவரிச் சட்டத் திருத்தத்தின்படி 60 சதவீதம் வரி மற்றும் கூடுதல் வரியாக 15 சதவீதம் விதிக்கப்படும். சொத்துக்களை கணக்கிடும் அதிகாரி கூடுதலா 10 சதவீதம் என ஒட்டுமொத்தமாக வரி, அபராதம் என 85 சதவீதம் வரி விதிக்கப்படும்.
இந்த வரியில் 30 சதவீதம் பிரதம மந்திரி கிராபி கல்யான் யோஜனா திட்டத்தில் சேர்க்கப்படும். இந்த திட்டத்தில் இருந்து கிடைக்கும் பணம், நீர்பாசனம், வீடுகட்டுதல், கழிப்பறை, உள்கட்டமைப்பு,தொடக்க கல்வி, அடிப்படை சுகாதாரம், வாழ்கைத் தரம் மேம்பாடு ஆகிய மக்கள் நலப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.