தமிழக கேரள எல்லை பகுதியான செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனைச் சாவடியில் உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.28 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு 2 பேர் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை மறித்து நிறுத்திய போலீசார், விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களிடம் இருந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது, புதிய 2000 மற்றும் 500 நோட்டுகள், பழைய 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டு பிடித்தனர். மொத்த ரூ.28 லட்சம் இருந்தது. இதையடுத்து போலீசார், அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து, 2 பேரையும் காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் காவல் நிலையத்தில் விசாரித்தனர். பணம் கொண்டு செல்வதற்கான எவ்வித ஆவணமும் அவர்களிடம் இல்லாததால், வருமான வரித்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.