Perarivalan Case: பேரறிவாளன் விடுதலை சாத்தியமானது எப்படி..! உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.. முழு விவரம்..
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜூவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஓப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆளுநர் எந்தவொரு முடிவும் எடுக்காததால், ராஜூவ் காந்திகொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையில் அரசமைப்பில் மத்திய அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டி மத்திய அரசு வாதிட்டது. தமிழக அரசும், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய விவகாரத்தில் குடியரசுத் தலைவரை தலையிட வைப்பது ஏன்? அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்று வாதிட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் பேரறிவாளன், தமிழக அரசு, மத்திய அரசு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்திருந்தன. பேரறிவாளனை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக வாதங்கள் நடைபெற்ற நிலையில் இன்றைய தீர்ப்பு எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய அரசிலமைப்பின் பிரிவு 161 வது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தியதால், அரசியல் சாசன சட்டத்தின் படி 142 ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது அரசியலமைப்பு சட்டப்படி தவறு. 161 பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதபடுத்தினால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வழிவகுக்கிறது பிரிவு 142. மாநில அரசு முழுமையாக ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுதலை செய்யும் முடிவை எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.மாநில அமைச்சரவையின் முடிவை ஆளுநர் வேண்டுமென்றே தாமதப்படுத்திகிறாரோ என்பதை கருத்தில் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பேரறிவாளன் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Breaking: பேரறிவாளன் விடுதலை..முடிவுக்கு வந்த 31 ஆண்டு கால சிறைவாசம்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு