சேகர் ரெட்டிக்கு பதில் சுதா நாராயணமூர்த்தி.. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக பதவியேற்றார்
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக பிரபல சமூக சேவகியும், இன்போசிஸ் நிறுவன தலைவருமான சுதா நாராயணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த தொழிலதிபர் சேகர்ரெட்டியின் வீட்டில் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் பெறுமானமுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் சேகர் ரெட்டியின் வீட்டில் நகை, முக்கிய ஆவயங்கள் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
இதனையடுத்து சேகர்ரெட்டியை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவியில் இருந்து, ஆந்திர மாநில அரசு அதிரடியாக நீக்கியது.
இந்நிலையில் சேகர் ரெட்டிக்குப் பதிலாக சமூக சேவகியும், இன்போசிஸ் நிறுவன தலைவருமான சுதா நாராயணமூர்த்தியை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக ஆந்திர மாநில அரசு நியமனம் செய்துள்ளது.
இதனையடுத்து சுதா நாராயணமூர்த்தி, திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராக ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க வாசலில் பதவியேற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சுதாநாராயணமூர்த்தி திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அன்னதானக்கூடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பக்தர்களின் அன்னதானத்திட்டத்துக்கு காய்கறிகள், அரிசி போன்றவற்றை சுதா நாராயணமூர்த்தி காணிக்கையாக வழங்கினார்.