மானிய விலை சமையல் கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு!
மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.1.50 காசுகள் உயர்த்தி அரசு எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ரேஷன் கார்டு வைத்து இருக்கும் மக்களுக்குஆண்டுக்கு 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்களை மானிய விலையில் அரசு வழங்கி வருகிறது. நாட்டில் மொத்தம் 18.11 கோடி மக்கள் சமையல் சிலிண்டருக்கான மானியத்தை பெற்று வருகிறார்கள்.
மானிய விலையில் மக்களுக்கு சமையல் கியாஸ்சிலிண்டர்களை அரசு வழங்குவதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இதை சரி செய்யும் விதமாக, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டருக்கான விலையை மாதம் தோறும் 2 ரூபாய் உயர்த்திக் கொள்ளலாம் என அரசு கடந்த ஆண்டு ஜூலையில் அறிவித்தது.
அதன்படி, கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை 10 முறை என ஒட்டுமொத்தமாக 20 ரூபாய் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சமையல் சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் மானியம் முழுவதையும் ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஒவ்வொரு மாதமும் மானியவிலை சமையல் சிலிண்டர் விலையை 4 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
கடந்தஆண்டு ஜூன் மாதம் மானியவிலை சமையல் சிலிண்டர் விலை ரூ.419க்கு டெல்லியில் விற்பனையான நிலையில், ஜி.எஸ்.டிக்கு பின் ரூ.487.18க்கு விற்பனையாகிறது.
இந்நிலையில், மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று உயர்த்தியுள்ளன. அதன்படி, சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.1.50 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றின் விலை டெல்லியில் ரூ. 487.18க்கு விற்கப்பட்ட நிலையில் இனி ரூ.488.68 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1-ந்தேதி ரூ. 7 உயர்த்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது, சென்னையில் மானிய சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ.609க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இனி ரூ.1.50 காசுகள் உயர்த்தப்படும்.
அதேசமயம், மானியம் அல்லாத சிலிண்டர்கள் விலை ரூ.1.50 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ.599 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், விமானங்களுக்கான எரிபொருள் விலை 6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடர்ந்து 3 வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.