பண்பலை ஏலத்தில் சன் குழுமத்தைச் சேர்ந்த ரெட் எஃப் எம் நிறுவனம் பங்கேற்க அனுமதியளிக்கக் கூடாது என சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கில், மத்திய அரசு விளக்கமளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சன் குழுமத்தை சேர்ந்த ரெட் எஃப் எம் நிறுவனம், பண்பலை ஏலத்தில் பங்கேற்க அனுமதி அளிக்ககூடாது என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

இதனை தலைமை நீதிபதி டி எஸ் தாக்கூர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாாித்தது. இதில் ஆஜரான சுப்ரமணிய சுவாமி, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பண்பலை ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்திற்கு அனுமதி அளித்தால், அது வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் என்று வாதிட்டார். 

மேலும் இது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னை என்றும் இதன் காரணமாக ரெட் எஃப் எம் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவுட்டனர்.