கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் மாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருபுறம் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து, இது மாணவர்கள் காவி உடை அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வரத்தொடங்கினர்.

இந்த போராட்டத்தின் தாக்கம் மாநிலம் முழுவதும் பரவியதை அடுத்து, பதற்றத்தை தணிக்க பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை கடந்த வாரம் வியாழக் கிழமை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இன்று முதல் பள்ளிகளை திறக்க உத்தரவிட்டது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரையில் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் உடைகளை அணிந்து பள்ளிக்கு வர மாணவர்களுக்கு இடைக்கால தடை விதித்தது. நீதிமன்ற உத்தரவின்பேரில், 5 நாட்களுக்குப் பிறகு இன்று 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில், அசம்பாவிதம் நிகழாமல் இருக்க காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பல பள்ளிகளுக்கு மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்திருந்தனர். அப்படி கர்நாடக மாநிலம் மாண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. மாணவிகளை விடுவதற்காக வந்திருந்த பெற்றோர்கள், பள்ளிக்குள் சென்றதும் ஹிஜாப்பை அகற்றுவதாக கூறினர். ஆனால் அதை ஏற்க மறுத்த ஆசிரியர்கள், ஹிஜாப் அணியாமல் வந்தால் மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்க முடியும் என்று தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
