மீண்டும் எம்.பி. ஆவாரா சீதாராம் யெச்சூரி? - ராகுல் காந்தியுடன் திடீர் சந்திப்பு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஜூலையுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அவர் மீண்டும் எம்.பி. பதவியை பெறுவது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 மாநிலங்களவை எம்.பிக்கள்
மேற்கு வங்காளத்திற்கு மொத்தம் 5 மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் டெரிக் ஓ பிரையன், சேகர் ராய், பந்தோபாத்யாயா ஆகியோர் திரிணாமூல் காங்கிரசை சேர்ந்தவர்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் மீதம் உள்ள 2 எம்.பிக்கள்.
இந்த நிலையில் இவர்கள் 5 பேரின் பதவிக் காலம் ஜூலையுடன் நிறைவு பெறுகிறது. மேற்கு வங்காளத்தில் இருந்து ஒரு உறுப்பினர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால் அவருக்கு 49 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அவசியம்.
கூட்டாக செயல்படுமா?
294 உறுப்பினர்களை கொண்ட மேற்கு வங்காள சட்டப்பேரவையில் திரிணாமூல் காங்கிரசுக்கு மொத்தம் 210 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த அடிப்படையில் 4 பேர் திரிணாமூல் காங்கிரசில் இருந்து மிக எளிதாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார்கள். காங்கிரசுக்கு 44 எம்.எல்.ஏக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.
இந்த இரு கட்சிகளும் வரவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் கூட்டாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங். ஆதரவு அவசியம்
சீதாராம் யெச்சூரியின் பதவிக் காலம் ஜூலையுடன் முடியவுள்ள நிலையில், அவரை மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய காங்கிரஸ் ஆதரவு அளிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சீதாராம் யெச்சூரியும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சந்தித்து பேசினர்.
அப்போது மேற்கு வங்காள மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என யெச்சூரி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.