கலால்வரி குறைப்பு கடலில் கரைத்த பெருங்காயம்’ - மத்திய அரசை ‘வெளுத்து வாங்கிய’ சிவ சேனா கட்சி
பல மாதங்கள் விலை கடுமையாக அதிகரித்த நிலையில், பெட்ரோல், டீசல் மீது 2 ரூபாய் கலால் வரியை மத்திய அரசு குறைத்தது என்பது, கடலில் பெருங்காயம் கரைத்தது போன்று இருக்கிறது என்று சிவ சேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், மராத்திய பழமொழியில் “ ஒட்டகம் வாயில் சிறிய கடுகு போட்டது போன்றதாகும்’’ என்று சமீபத்திய கலால் வரி குறைப்பு என்பது போதாது என்று சிவ சேனா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை கடந்த ஜூலை மாதம் முதல் நாள்தோறும் உயர்த்தி அறிவிக்கப்பட்டதில் இருந்து பெட்ரோல் ரூ.7.80 காசுகளும், டீசல் ரூ. 5.70 காசுகளும் உயர்ந்தன. இதனால், பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில், கடந்த 3-ந் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை தலா 2 ரூபாய் குறைத்து இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், கலால் வரி குறைப்பு போதாது, அது ஏமாற்றும் வேலை என்ற ரீதியில் சிவ சேனாகட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாம்னா’வில் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது-
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு 2 ரூபாய் குறைத்து கடந்த 3-ந் தேதி அறிவித்தது. கடந்த 3 மாதங்களாக விலை கடுமையாக உயர்ந்த நிலையில் இந்த விலை குறைப்பு முடிவு, வாகன ஓட்டிகளுக்கும், சாமானிய மக்களுக்கும் உண்மையில் பலன் அளிக்குமா?. இந்த முடிவைப் பார்க்கும் போது, ‘கடலில் பெருங்காயத்தை கரைத்துவிட்டது’ போன்று இருக்கிறது.
தொடக்கத்தில் விலையை கடுமையாக உயர்த்திவிட்ட மத்திய அரசு, பின்னர் மக்கள் அதிருப்தி தெரிவித்தவுடன் பெயரளவுக்கு கலால்வரியை குறைத்துள்ளோம் பொதுவாகக் கூறுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில், ஒரு துளி குளிர்ந்த நீர் உடலில் விழுந்தது போல் இருக்கிறது.
மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்க மனதளவில் இன்னும் தயாராகவில்லை என்பதையே இது காட்டுகிறது.
பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை சரிந்தால்கூட, அதாவது பீப்பாய் 100 டாலர் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தும் பெட்ரோல் விலை லிட்டர் 80 ரூபாயில் இருந்தும்,டீசல் ரூ.63 லிருந்தும் குறையவில்லை. இதன் மூலம் மத்திய அரசும், மாநில அரசுகளும் மனதளவில் விலையை குறைக்க தயாராக இல்லை என்பதையை காட்டுகிறது.
அரசு எண்ணெய் நிறுவனங்களுக்குதான் நல்ல நாட்கள் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. சாமானிய மக்களுக்கு இன்னும் மோசமான நாட்களாகவே இருக்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.