ரூபாய் நோட்டு தடைபோன்று ஆகப்போகிறது ‘புல்லெட் ரெயில்’ - மத்திய அரசை ‘கிண்டல்’ செய்யும் ப.சிதம்பரம்
நாட்டு மக்கள் அனைவரையும் பெரும் துயரத்தில் சிக்க வைத்த ரூபாய் நோட்டு தடை போன்று,புல்லெட் ரெயில் திட்டம் ஒவ்வொன்றையும் கொல்லப் போகிறது. அந்த திட்டத்துக்கு பயன்படுத்தும் நிதியை ரெயில் பாதுகாப்புக்கு பயன்படுத்தலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்ததலைவர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.
ஜப்பான் நாட்டு கடனுதவியுடன் அகமதாபாத்- மும்பை இடையே அதிவேக புல்லெட் ரெயில் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் குஜராத்தில் நடந்த விழாவில், ஜப்பான் அதிபர்ஷின்ஷோ அபே, பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.1.10 லட்சம் கோடியாகும். 2022ம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மும்பை புறநகர் ரெயில் நிலையமான எல்பின்ஸ்டோன் நிலையத்தில் மேம்பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 23 பயணிகள் பலியானார்கள்.
இந்த சம்பவத்தையடுத்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம், புல்லெட் ரெயில் திட்டத்துக்கு பதிலாக அந்த நிதியை ரெயில் பாதுகாப்புக்கு செலவு செய்யக்கோரி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது-
ரூ.1.10 லட்சம் கோடியில் மும்பை-அகமதாபாத் இடையே செயல்படுத்த உள்ள புல்லெட் ரெயில் திட்டம், சாமானிய மக்களுக்கானது அல்ல. மிகவும் வசதி படைத்தவர்கள், பணக்கார்கள் தங்களின் பண வலிமையை காட்ட பயணிக்கும் இடமாக இருக்கும்.
புல்லெட் ரெயில் திட்டத்துக்கு செலவு செய்யும் ரூ.1.10 லட்சம் கோடியை நாட்டின் ரெயில்பாதுகாப்புக்கு செலவு செய்யலாம் என்று ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அறிவுறுத்துகிறேன்.
புல்லெட் ரெயில் என்பது ரூபாய் நாட்டு தடை உத்தரவு போல் ஆகப்போகிறது. ரெயில் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் கொன்றுவிடும். அதற்கு பதிலாக அந்த நிதி முழுவதையும் ரெயில்பாதுகாப்பு, இருப்பு பாதையை தரம் உயர்த்துதல், சிக்னல் நவீனப்படுத்துதலுக்கு பயன்படுத்தலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.