‘ஆதாரத்துடன் பேசுங்கள்’ ‘துரோகியை வௌியேற்றுங்கள்’ - பா.ஜனதா எம்.பிகள் இடையே ‘டுவிட்டரில் வார்த்தை போர்’
பா.ஜனதா கட்சியின் மூத்த எம்.பி.கள் சத்ருகன் சின்ஹா, சுசில்குமார் மோடி ஆகிய இருவரும் ஊழல் தொடர்பாக டுவிட்டரில் கடுமையாக வார்த்தைகளை பயன்படுத்தி மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பா.ஜனதா கட்சியின் மூத்த எம்.பி. சத்ருகன் சின்ஹா தொடர்ந்து 2-வது முறையாக எம்.பியாக இருந்து வருகிறார். இருந்தபோதிலும், தனது கட்சி தலைமையை அதிரவைக்கும் அளவுக்கு அவ்வப்போது கருத்துக்களை கூறி வியக்கவைப்பார்.
பா.ஜனதாவுக்கு எதிராக இருக்கும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், லாலு பிரசாத்யாதவுடனும் பல நேரங்களில் சின்ஹா நட்பு பாராட்டியதால், கட்சி மேலிடம் மிகுந்த அதிர்ச்சியுற்றது.
இந்நிலையில், சமீபத்தில் பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரூ. ஆயிரம் கோடிக்கு பினாமி சொத்து சேர்த்துள்ளார் என மற்றொரு மூத்த எம்.பியும், பீகாரைச் சேர்ந்தவருமான சுஷில்குமார் மோடி தெரிவித்தார். மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராகவும் பா.ஜனதா கட்சி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.
இது குறித்து பா.ஜனதா எம்.பி. சத்ருகன் சின்ஹா டுவிட்டரில் நேற்று பதிவிட்டார் அதில் கூறுகையில், “ எதிர்மறையான கருத்துக்களை கூறும் அரசியல் போதும். நம் கட்சித் தலைவர்கள் மீது எதிர்க்கட்சியினர் சேற்றைவாரி இறைக்கிறார்கள். கெஜ்ரிவால், லாலுபிரசாத் யாதவாக இருக்கட்டும்.
நமது பா.ஜனதா கட்சி உண்மையில் நேர்மையையும், வௌிப்படைத்தன்மையையும் நம்புகிறது. இதை ஒன்றாகவே கடைபிடித்துச் செல்ல வேண்டும். ஒரு குற்றச்சாட்டு கூறும்போது அதன் உண்மைத்தன்மை அறிந்து சொல்லவேண்டும். நிரூபிக்கப்படாவிட்டால் கூறக்கூடாது’’ எனத் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து பா.ஜனதா கட்சியின் மற்றொரு மூத்த எம்.பி. சுஷில் குமார் மோடி ,டுவிட்டரில்பதிவிட்டார். அதில் அவர் கூறுகையில், “ லாலுபிரசாத் யாதவின் ரூ. ஆயிரம்கோடி பினாமி சொத்துக்கள் குறித்த குற்றச்சாட்டுக்கு ஆதரவாக முதல்வர் நிதிஷ்குமார்கூட வரவில்லை. ஆனால், பா.ஜனதாவின் சத்ருகன் சின்ஹாதான் வந்துள்ளார்.
யாரெல்லாம் மக்கள் மத்தியில் புகழ்பெற்று இருக்கிறார்களோ அவர்களை நம்ப வேண்டியது அவசியமில்லை. நமது கட்சியில் இருந்து ‘துரோகிகள்’ மிக விரைவாக வௌியேற்றப்பட வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
சுஷில் குமார் மோடியின் ‘துரோகி’ என்ற வார்த்தை டுவிட்டர்வாசிகளிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பீகாரைச் சேர்ந்தவரும் எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹாவிடம் இது குறித்து செய்தி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலில் “ நான் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை. எனக்கு சுஷில்குமார் மோடியை மிகவும் பிடிக்கும். நான் தர்க்க ரீதியாகவே பேசினேன்’’ என்றார்.
பா.ஜனதா எம்.பி.களிடையே நடந்த வார்த்தைப் போர் குறித்து ராஷ்ட்ரிய ஜனதா களம் கட்சியின் எம்.எல்.ஏ. சக்தி சிங் யாதவ் கூறுகையில், “ சத்ருகன் சின்ஹா சில நேரம் மனம் திறந்து பேசிவிடுவார். அதுபோலத்தான் இப்போதும் உண்மையை பேசி இ ருக்கிறார். அவரின் துணிச்சலான பேச்சு அந்த கட்சியில் பலருக்கு பிடிக்காது’’ என்றார்.