மொபைல் ஆப்ஸ் மூலம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ! அமித் ஷா அதிரடி!!
மொபைல் ஆப்ஸ் மூலம் அடுத்துவரும் ஆண்டுகளில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்
இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் சென்சஸ் கமிஷனர் அலுவலகங்களுக்கான புதிய கட்டடத்திற்கு புது டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். அதன்பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு மொபைல் ஆப் மூலமாகவே நடைபெறும்.மக்கள் தொகை கணக்கெடுப்பு 16 மொழிகளில் நடைபெறும். இதற்கு 12,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மொபைல் ஆப் மூலமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவது இதுவே முதல் முறை. பேப்பர் பேனா ஆகியவற்றை பயன்படுத்தும் காலத்தில் இருந்து விடுபட்டு டிஜிட்டல் புள்ளிவிவர காலத்துக்கு இந்தியா முன்னேறுகிறது.
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு டிஜிட்டல் டிஜிட்டல் முறையில் அமைவது பெரிய புரட்சியாக அமையும்
.
2021 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின் அடிப்படையில் எதிர்கால இந்தியாவுக்கான திட்டங்களை வகுக்க முடியும். சமூகநலத் திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களை வகுப்பதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு உதவும்.
இந்தியாவின் 130 கோடி மக்களுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் பயன்கள் குறித்து முதலில் பிரச்சாரம் செய்வோம். மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலமாக நகராட்சி வார்டுகள், சட்டமன்ற தொகுதி எல்லைகள், மக்களவைத் தொகுதி எல்லைகள் ஆகியவற்றையும் வரையறுக்க இயலும்.
இதற்கு முன் வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படவில்லை. 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு நிலைமை அப்படியே மாறிவிட்டது. திட்டமிடலுக்கான அடிப்படை சிந்தனையும் மாறிவிட்டது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் 22 சமூக நலத் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது ஆண்-பெண் எண்ணிக்கை வித்தியாசம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. எனவே பெண் குழந்தைகள் எண்ணிக்கையை சமூகத்தில் அதிகரிப்பதற்காக சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.
அந்த திட்டங்களில் ஒன்றுதான் பேட்டி பச்சாவோ பேட்டி பத்தாவோ. இந்த திட்டத்தின் அடிப்படையில் ஹரியானாவில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி நாம் இந்தியா முழுமைக்குமான திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியம். தேசிய மக்கள்தொகை பதிவேடு அசாமில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டின் அகில இந்திய மாதிரியாக அமையும்
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்