ரோஹிங்யா அகதிகளை வெளியேற்ற நவ.21 வரை தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு...
நாட்டில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய ரோஹிங்யா அகதிகள் வெளியேற்றத்துக்கு நவம்பர் 21ஆம் தேதி வரை தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரோஹிங்யா அகதிகள், நாட்டின் பாதுகாப்புக்கு பிரச்னையாக உள்ளனர் என்று மத்திய அரசு கருத்து தெரிவித்திருந்த நிலையில், ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றும் விவகாரத்தில் விசாரணை நடத்த வசதியாக, அனைத்து தரப்புக்கும் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். வரும் நவ. 21ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம், அதுவரை ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றக் கூடாது என்று கூறியுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்த விவகாரத்தில் இரு தரப்பும் அனைத்து ஆவணங்கள் மற்றும் சர்வதேச மரபுகளைத் தொகுத்து, நீதிமன்றத்திடம் வழங்குமாறு கேட்டுக்கொண்டது. அப்போது கருத்து தெரிவித்த அந்த அமர்வு, நாட்டின் பாதுகாப்பு என்பது இரண்டாவதாக இருக்க முடியாது; அதே நேரம் ரோஹிங்யா அகதிகளின் மனித உரிமைகளையும் மனதில் கொள்ள வேண்டும். நாங்கள் நடுநிலையுடன் இருக்க வேண்டும். இது வழக்கமாக வரும் வழக்கு இல்லை. இதில் பலரின் மனித உரிமை அடங்கியிருப்பதால், அதுகுறித்து கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது என்று கூறியுள்ளது நீதிமன்றம்.
முன்னதாக, அண்டை நாடான மியான்மரில் இருந்து பௌத்தர்களின் தாக்குதலில் இருந்து தப்பி ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இந்தியா, வங்காளதேசம், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இந்தியாவில் முகாம்களிலும், சட்டவிரோதமாக பல இடங்களிலும் வசிக்கும் ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றுவது தொடர்பாக இந்தியா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் மியான்மர் அரசுடன் பேசத் தொடங்கியது.
இந்நிலையில், ரோஹிங்யா இஸ்லாமியர்களை வெளியேற்றுவது குறித்த இந்திய அரசின் முடிவுக்கு தடை கோரி ரோஹிங்யா முஸ்லிம்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, எங்களிடம் பயங்கரவாத செயல்பாடுகள் ஏதுமில்லை என்று அகதிகள் தரப்பில் அபிடவிட் ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதிலளித்து, மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த பதிலில் ரோஹிங்யா அகதிகளை வெளியேற்றுவது அரசின் கொள்கை முடிவு என்றும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றும் கூறியது.
தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், ரோஹிங்யா அகதிகளை நவம்பர் 21ஆம் தேதி வரை நாட்டைவிட்டு வெளியேற்றக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.