sarath yadav planning to conduct a meeting

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் சரத்யாதவ், எதிர்க்கட்சிகளை அழைத்து மதவாதத்துக்கு எதிரான மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனால், பீகார் முதல்வரும் அந்த கட்சியின் தலைவருமான நிதிஷ் குமாருக்கும், சரத் யாதவுக்கும் இடையிலான மோதல் முற்றி வருகிறது.

லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளுடன் மகா கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்த நிதிஷ் குமார் கடந்த வாரம் கூட்டணியை முறித்தார். லாலு பிரசாத் குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டை காரணமாகக் கூறிய நிதிஷ் குமார், பா.ஜனதா ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார்.

நிதிஷ்குமாரின் இந்த நடவடிக்கைக்கு கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சரத்யாதவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வௌிப்படையாகவே நிதிஷ்குமாருக்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளை அழைத்து மதவாதத்துக்கு எதிரான மாநாடு நடத்த சரத் யாதவ் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இம்மாதம் 17-நதேதி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக இந்த மதவாதத்துக்கு எதிரான மாநாட்டை நடத்த சரத் யாதவ் மும்முரமாக உள்ளார்.

இந்த மாநாட்டுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதா ராம் யெச்சூரி, சமாஜ் வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா உள்ளிட்ட தலைவர்களை அழைக்க சரத் யாதவ் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து சரத் யாதவ் தரப்பினர் கூறுகையில், “ இந்த மாநாடு என்பது, நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பான மாநாடு கிடையாது. மதவாதத்தை எதிர்க்கிறோம். அனைத்து மதங்களும், இனமும் கலந்ததுதான் நமது தேசம் என்பதை உணர்த்த இந்த மாநாடு கூட்டப்படுகிறது’’ எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே திங்கள்கிழமை மாநிலங்கள் அவையில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் கொடுப்பதற்காக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு ஐக்கிய ஜனதா எம்.பி.க்கள்திடீரென ஆதரவு தெரிவித்தனர். 

ஆனால், நிதிஷ் குமார், பாஜனதா கூட்டணி பீகாரில் ஆட்சி அமைத்த உடனேயே, நாடாளுமன்றத்திலும் பா.ஜனதாவை ஆதரிப்போம் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித்தொடர்பாளர் கே.சி. தியாகி தெரிவித்தார்.ஆனால், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தமசோதா அந்த கட்சியினர் ஆதரவு தெரிவித்தது, ஆளும் பாஜனதா கட்சிக்கு சற்று அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது.