same question paper be will be used around all areas for coming neet exams

அடுத்த ஆண்டு முதல் 'நீட்' தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளே வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

கடந்த ஓரிரு ஆண்டுகளாகவே, தமிழகத்தில் நீட் பற்றி எரிந்தது. உச்ச நீதிமன்றமும் நீட் தேர்வை கட்டாயம் ஆக்கியதால், மாணவர்கள் வேறு வழியின்றி நீட் எழுத வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். 
இந்நிலையில் கடந்த ஆண்டு நாடு முழுவதும் மருத்துவக் கல்வி சேர்க்கைக்காக நடந்த 'நீட்' எனப்படும் தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான வினாத்தாள்கள் பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. 

குறிப்பாக தமிழகத்தில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும், வினாத்தாள்கள் கடினமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், இவ்வாறு மாநிலத்துக்கு மாநிலம் வேறு வேறு மாதிரியான வினாத்தாள்களை வழங்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பாக, இன்று நடைபெற்ற விசாரணையின்போது சிபிஎஸ்இ., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியபோது, கடந்த ஆண்டு நடைபெற்ற 'நீட்' தேர்வின்போது ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான வினாத்தாள்கள் பயன்படுத்தப் பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதன் காரணமாக அடுத்து வரும் ஆண்டில், 'நீட்' தேர்வுக்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளைப் பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்தத் தகவல் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் ஆண்டில் நீட் குளறுபடிகள் இல்லாமல் சுமுகமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.