சபரிமலை தேவஸ்தானம் இன்று மூடல் – ஆனிமாத பிரம்மோற்சவம் முடிந்தது
ஆனி மாத சிறப்பு பூஜைகளுக்காக திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில், இன்று இரவு மூடப்படுகிறது.
ஆனி மாதம் பிறந்தவுடன், அனைத்து கோயில்களிலும் பிரம்மோற்சவம் நடைபெறும். இதையொட்டி கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில், கடந்த 15ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடந்து தினமும் அதிகாலை நெய் அபிஷேகம் நடத்தப்பட்டது.
அனைத்து நாட்களிலும், காலையில் உஷபூஜை, பகல் களபாபிஷேகம், உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு அத்தாழ பூஜை ஆகியவை நடத்தப்பட்டன. இரவு 7 மணி முதல் 8 மணி வரை, படிப் பூஜை நடத்தப்பட்டது. அப்போது, 18 படிகளும் பூக்களால் அலங்கரித்து, தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜையை நடத்தினார். இந்நிலையில், ஆனிமாத பிரம்மோற்சவ விழா இன்றுடன் முடிவடைகிறது.
இன்று மாலை சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டு, இரவு 10 மணியளவில், ஐயப்பன் சன்னதியின் நடை மூடப்படுகிறது. இதையடுத்து வரும் ஆடி, ஆவணி மாதங்களில் சிறப்பு வழிப்பாடுகளுக்கு நடை திறக்கப்படும் என கூறப்படுகிறது.