திருப்பதியில் தேவாலயம் கட்டப்பட இருப்பதாக வதந்தி பரவிய நிலையில் தேவஸ்தானம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி வந்து பெருமாளை தரிசனம் செய்கின்றனர். காணிக்கையாகவும் தங்கம், பணம் என்று வந்து குவிகிறது. உலகின் பணக்கார கடவுளாக பக்தர்களால் ஏழுமலையான் கொண்டாடப்படுகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிலையில் திருப்பதியில் தேவாலயம் கட்ட வேலைகள் நடப்பதாக சில நாட்களாக ஒரு தகவல் பரவியது. சமூக ஊடங்களில் இதை பற்றி காரசாரமான விவாதங்கள் நடந்தது. திருப்பதி தேவஸ்தானத்தின் கவனத்திற்கு இது சென்ற போது அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக தேவாலயம் கட்டப்படுவதாக வதந்தியை சிலர் பரப்புவதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்தனர். 

இதையடுத்து தீவிரமாக விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் தேவாலயம் கட்டப்படுவதாக வதந்தி பரப்பிய 3 பேரை கைது செய்தனர்.

சேஷாச்சலம் வனப்பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த கம்பியை புகைப்படம் எடுத்து சிலுவை போல சித்தரித்து சமூக ஊடகங்களில் பரப்பிவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை 3 இளைஞர்களையும் சிறையில் அடைத்தனர்.

திருப்பதியில் தேவாலயம் கட்டப்படுவதாக வந்த தகவல் சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது.