பெண்களை அரைக்கால் சட்டையில் பார்க்க விரும்புகிறாரா ராகுல்? - ஸ்மிருதி ராணி பதிலடி
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை கிண்டலடித்த ராகுல் காந்திக்குப் பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘‘பெண்களை அரைக்கால் சட்டையில் பார்க்க ராகுல் விரும்புகிறாரா? என கேள்வி எழுப்பினார்.
அரைக்கால் சட்டை...
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி குஜராத் மாநிலத்தில் 2 நாள் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். வதோதராவில் மாணவர்கள் மத்தியில் அவர் பேசுகையில், ‘‘பா.ஜனதாவின் முக்கிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ். அதில் எத்தனை பெண்கள் உள்ளனர்?.
யாராவது ஒரு பெண்ணையாவது ‘அரைக்கால் சட்டை அணிவகுப்பில்’ (முன்பு அணிவகுப்பின்போது அரைக்கால் சட்டையாக இருந்தது இப்போது முழுக்கால் சட்டையாக மாற்றப்பட்டு உள்ளது) காண முடிகிறதா?.
ஆனால் காங்கிரஸ் கட்சியில் அனைத்து மட்டத்திலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது’’ என்று கூறினார்.
ஸ்மிருதி பதிலடி
ராகுல் காந்தியின் கிண்டல் பேச்சுக்கு மத்திய அமைச்சரும், பா.ஜனதா தலைவர்களுள் ஒருவருமான ஸ்மிரிதி இரானி பதிலடி கொடுத்து உள்ளார்.
இது குறித்து அமேதியில் அவர் கூறியதாவது-
ராகுல் காந்தியின் பேச்சு கண்டனத்துக்கு உரியது. பெண்கள் மிகவும் அமைதியானவர்கள். ஆனால் அதே சமயம் திறமையானவர்கள்.
அநாகரீக கருத்து
அரை கால் சட்டையில் தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கி உள்ளதா? அதை தான் அவர் பார்க்க விரும்புகிறாரா? தன்னுடைய அநாகரிகமான கருத்து மூலம் ஒட்டு மொத்த பெண்களையும் ராகுல் காந்தி அவமானப்படுத்தி விட்டார்’’.
இவ்வாறு அவர் கூறினார்.
‘பா.ஜனதா பெண் தலைவர்களுக்கு பயப்படுகிறார், ராகுல்’
ராகுலின் ஆர்.எஸ்.எஸ். கிண்டல் குறித்து பா.ஜனதா தலைவர் ஷாநவாஸ் கான் கூறி இருப்பதாவது-
‘‘பா.ஜனதாவில் பெண்களுக்கு அதிக மரியாதை கொடுக்கப்படுகிறது. உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர்களில் அதிக அளவில் பெண்கள் உள்ளனர். பா.ஜனதா, ஆர் எஸ் எஸ் குறித்து புரிந்து கொள்ள ராகுலுக்கு இன்னும் நீண்ட காலம் பிடிக்கும். இதற்காக அவர் ஆய்வு நடத்த வேண்டியது இருக்கும்.
பெண்கள் பற்றி ராகுல் கூறிய வார்த்தைகள் துரதிர்ஷ்டவசமானது. அவர் எல்லை தாண்டிவிட்டார். காங்கிரசை கலைத்துவிட வேண்டும் என்ற அண்ணல் காந்தியின் கனவை ராகுல் நனவாக்கிவிடுவார். பா.ஜனதாவில் உள்ள பெண் தலைவர்களுக்கு அவர் பயப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.