யமுனை நதியில் மலம் கழித்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு....
யமுனை நதியில் குப்பைகளை கொட்டுதல், திறந்த வௌியில் மலம் கழித்தல் போன்றவற்றை செய்தால், ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
யமுனா நதியில் ஏற்பட்டு வரும் மாசுவை கட்டுப்படுத்துவது மற்றும் தூய்மை செய்வது தொடர்பான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வருகிறது.
நீதிபதி ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர் பிறப்பித்த உத்தரவில், “ யமுனை நதியை அசுத்தப்படுத்தக் கூடாது என்பதற்காக கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 13-ந்தேதியில்இருந்து நாங்கள் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறோம்
யமுனா நதி மற்றும் அதன் கரையை ஒட்டிய பகுதிகளில் திறந்தவெளி மலம் கழிக்கவும், கழிவுகளை கொட்டவும் தடைவிதிக்கப்படுகிறது. இந்த உத்தரவுகளை மீறுபவர்களை போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இந்த மீறும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், இதனை கண்காணிக்க டெல்லி நீர்வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு யமுனை நதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், கழிவு நீர் சுத்தகரிக்கும் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து மேற்பார்வையிட்டு வருகிறது. மேலும், டெல்லி அரசும், மற்ற மாநகராட்சிகளும் அனைத்து வகையான திடக்கழிவுகளையும் யமுனைநதி கரையோரத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். மேலும், அது குறித்த அறிக்கையையும் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.