கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுக்கிட்டு கொடுத்திருக்கோ… லாட்டரியை கைவிட நினைத்த இந்தியருக்கு ரூ.12 கோடி பரிசு
அபுதாபியில் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர் ஒருவர் லாட்டரி டிக்கெட் பழக்கத்தை கைவிடும் நோக்கில், கடைசியாக வாங்கிய லாட்டரி டிக்கெட்டுக்கு ரூ. 12 கோடி பரிசு விழுந்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராஜ் கிருஷ்ணன் கொப்பரம்பில். இவர் ஐக்கிய அரபு அமீரகம் தலைநகர் அபுதாபியில் ஒரு தனியார் கப்பல் நிறுவனத்தில் கடந்த 9 ஆண்டுகளாக பணியாற்று வருகிறார். இவருக்கு மாதம் 6 ஆயிரம் திர்ஹாம்(ரூ.ஒரு லட்சம் ஊதியம்) கிடைத்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஸ்ரீராஜ் வாங்கிய லாட்டரிக்கு ரூ. 12 கோடி(70 லட்சம் திர்ஹாம்) பரிசு விழுந்துள்ளதாக அபுதாபி பிக் டிக்கெட் டிரா நேற்று தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக லாட்டரி வாங்கும் பழக்கமும் கொண்ட ஸ்ரீராஜுக்கு இதற்கு முன் ஒருமுறை கூட பரிசு விழுந்தது இல்லை, ஆனால், இப்போது ஒட்டுமொத்தமாத அதிருஷ்டதேவதை இவர் மீது பரிசு மழை பொழிந்துள்ளார்.
இது குறித்து ஸ்ரீராஜ் கிருஷ்ணன் கூறுகையில், “ எனக்கு லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது என தொலைபேசியில் கூறியவுடன் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அந்த நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இப்போது என்னுடைய அதிருஷ்ட எண் 44698 என்று உறுதி செய்து கொண்டேன்.
இந்த முறை நான் லாட்டரி டிக்கெட் வாங்கும்போது இதுதான் கடைசிமுறை என நினைத்து வாங்கினேன். இதன் பின் வாங்கக்கூடாது என்று நினைத்து இருந்தேன். ஆனால், அதிர்ஷ்டம் இப்படி பரிசு மழை கொடுத்து இருக்கிறது.
என்னுடைய முதல் வேலை கேரளாவில் என் வீட்டுக்கடனை அடைக்க வேண்டும். அதைத்தான் எனது மனைவியும் விரும்புவாள். லாட்டரியில் பரிசு கிடைத்தாலும், நான் தொடர்ந்து அபுதாபியில் பணியாற்றவே விரும்புகிறேன். அதிருஷ்டத்தை கொடுத்த இந்த நாட்டை விட்டு ஏன் போக வேண்டும்?, எங்கு நாம் இதுபோன்ற அதிருஷ்டத்தை பெற முடியும்? நான் இங்குதான் இருப்பேன்'' என்றார்.