மலம் அள்ளும் பெருச்சாளி…. சாக்கடை சாவுகளுக்கு சாவுமணி அடித்த கேரள அரசு !!!
மலக்குழிக்குள் இறங்கி சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில் கேரள அரசு பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த ரோபோக்களுக்கு பெருச்சாளி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஜெட் வேகத்தில் போய்கொண்டிருக்கிறது. ஆனால் மலக்குழிகளையும்இ பாதாளச் சாக்கடைகளையும் இன்று வரை மனிதனே சுத்தம் செய்து வருகிறான்.
அப்படி சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி ஒவ்வொரு நாளும் மனிதர்கள் தங்கள் உயிரை மாய்த்து வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி அபாரமாக இருந்தாலும், இத்தகைய இறப்புக்கு இது வரை புதிய வழி கண்டுபிடிக்கப்படாமலேயே இருந்து வந்தது.
இதற்கு முடிவு கட்டும் வகையில் மலக்குழிகளையும்இ பாதாள சாக்கடைகளையும் சுத்தம் செய்ய கேரள அரசு ரோபோக்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
ஜென்ரோபோடிக்ஸ் என்ற தனியார் நிறுவனம் தயார்க்க இந்த ரோபோவுக்கு பெருச்சாளி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவை திருவனந்தபுரத்தில் 5 ஆயிரம் பாதாள சாக்கடைகளில் சோதனை செய்து பார்த்ததில் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
தற்போது இந்த ரோபோவுக்கான மொத்த செலவையும் கேரள அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.ப்ளூடூத், வை-பை கண்ட்ரோல் பேனல் உள்ளிட்ட அவற்றை கட்டுப்படுத்தும்சாதனங்களும் கழிவுகளை அள்ள வாளி, துடுப்பு போன்ற பொருட்களும் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோவை 9 இளைஞர்கள் கொண்ட குழு கண்டுபிடித்துள்ளது.
மலக்குழி சாவுகளுக்கு முடிவு கட்ட இருக்கும் இந்த பெருச்சாளி ரோபோ, வரும் மார்ச் 2ஆம் தேதி ஆற்றுக்கால் பகவதி கோவில் பொங்கல் தினத்தன்று தனது பணியைத் தொடங்கவுள்ளது.
ஒரு வழியாக விஷவாயு தாக்கி ஏற்படும் சாவுகளுக்கு கேரள அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதே போன்று மற்ற மாநில அரசுகளும் இதைனை ஊக்குவிக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்நோக்கியுள்ளனர்.