ரூ.251 ஸ்மார்ட்போன் ஞாபகம் இருக்கா?? - ‘தகிடுதித்தோம்’ செய்த மோகித் கைது
ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.251-க்கு ‘ப்ரீடம் ஸ்மார்ட் போன் ’ வழங்குவதாக பரபரப்பு ஏற்படுத்திய நொய்டாவைச் சேர்ந்த மோகித்கோயல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் வழங்கப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்து பரபரப்பை உண்டாக்கியது. இதைக்கேட்டு மற்ற நிறுவனங்கள் சாத்தியமில்லை என்று எதிர்ப்புக் குரல் கொடுத்தன.
ஆனால், தங்களால் ரூ. 251க்கு ஸ்மார்ட்போன் விற்பனை செய்ய முடியும், அதிலும் லாபம் இருக்கிறது என்று ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் மோகித் கோயல் தெரிவித்தார். இதையடுத்து, 7 கோடி பேர் இந்த ஸ்மார்ட் போனுக்கு முன்பதிவு செய்தனர். ஏராளமாந மக்கள் முன்பணம் செலுத்தினர். இதில் முன்பணம் செலுத்தியவர்களுக்கு ஏறக்குறைய 70 ஆயிரம் ஸ்மார்ட்போன் அனுப்பி வைக்கப்பட்டது.
இதில், காசியாபாத்தை சேர்ந்த அயம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் சார்பில், ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் ஏஜென்ட் எடுக்க ரூ. 30 லட்சம் பணம் கடந்த ஆண்டு செலுத்தப்பட்டது. ஆனால், அந்த ரூ.13 லட்சத்துக்குரிய ஸ்மார்ட்போன் மட்டுமே கொடுக்கப்பட்டது, மீதமுள்ள பணமும், ஸ்மார்ட்போனும் தரவில்லை. இது குறித்து ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தலைவர் மோகித் கோயலிடம் கேட்டபோது, பணத்தை தராமல் மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து, அயம் என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் காசியாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மோகித் கோயல், அவரின் சகோதரர் அன்மோல் கோயல் கூட்டாளிகள் தர்னா கார்க், அசோக் சதா, சுமித்குமார் ஆகியோரை அழைத்து விசாரணை நடத்தினர். இதில் இது போல் பல நிறுவனங்கள், ஏராளமான மக்களிடம் பணம் பெற்று மோசடி ெசய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, மோகித் கோயல், உள்ளிட்ட 4 பேரை போலீசார் பண மோசடியின் கீழ் கைது செய்தனர்.
இது குறித்து காசியாபாத் போலீஸ் எஸ்.பி. தீபக் குமார் கூறுகையில், “ கோயல் பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் வந்தன. பலரிடம் பெற்று ஸ்மார்ட்போன் தருவதாக வாக்கறுதி அளித்து, யாருக்கும் போன் தரவில்லை. இதையடுத்து, மோசடி செய்ததன் அடிப்படையில் அவரை கைது செய்து இருக்கிறோம்'' எனத் தெரிவித்தார்.