ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் திடீர் ராஜினாமா...!
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக விலகுவதாக உர்ஜித் படேல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக விலகுவதாக உர்ஜித் படேல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் 24-வது ஆளுநராக 2016 செப்டம்பரில் உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதில் இருந்தே ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. ரிசர்வ் வங்கிக்கு தன்னாட்சி அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்துக்கு சவால் விடும் வகையில், ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு சமீபத்தில் 3 கோரிக்கைகளை விடுத்தது. நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்பு பணத்தில் பெரும்பகுதியை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் என்பது அதில் ஒரு கோரிக்கை. இதற்கு ரிசர்வ் வங்கி உடன்படவில்லை.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சார்யா இந்த பூசலை வெளிப்படுத்தினார். இதில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். இந்த விவகாரத்தால் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கும், நிதி அமைச்சகத்துக்கும் இடையே உரசல் ஏற்பட்டு வந்தது. கடந்த அக்டோபர் மாதமே வாரியக் கூட்டத்தில் அவர் ராஜினாமாவை அறிவிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை நிதியமைச்சகம் திட்டவட்டமாக மறுத்தது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தற்போது ராஜினாமா செய்துள்ளார். அந்த கடிதத்தில் சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக உர்ஜித் படேல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ரகுராம்ராஜன் அதேபோல மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாகவே ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.